2026 மார்ச் 30, திங்கட்கிழமை

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

Lenin Raj   / 2026 மார்ச் 30 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, ஈராக் மக்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்து ஊடகங்களுக்கு எழுத்துப்பூர்வமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு மத்தியில், ஈராக்கிடமிருந்து ஈரானுக்குக் கிடைக்கும் ஆதரவிற்காக அவர் இவ்வாறு நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மொஜ்தபா கமேனி, ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இரண்டாவது புதல்வர் ஆவார்.

கடந்த பெப்ரவரி 28-ஆம்  திகதி போர் தொடங்கியபோது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அயதுல்லா அலி கமேனியை இஸ்ரேல் கொன்றது.

அதன் பின்னரே மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த வான்வழித் தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் பலத்த காயமடைந்ததாகவும், அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மொஜ்தபா கமேனி இறந்துவிட்டதாக அவ்வப்போது கூறி வருகின்றார்.

பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, பலத்த காயமடைந்த மொஜ்தபா கமேனி சிகிச்சைக்காக ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவரது ஒரு கால் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொஜ்தபா கமேனி குரல் பதிவுகளை வெளியிட்டுள்ள போதிலும், அவர் இதுவரை பகிரங்கமாக நேரில் தோன்றி உரையாற்றவில்லை.

ஈரானின் செய்தி நிறுவனமான 'இஸ்னா' வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈராக்கின் செல்வாக்குமிக்க ஷியா மதத் தலைவர் மகா ஆயதுல்லா அலி சிஸ்தானி மற்றும் ஈராக் மக்கள் ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை எதிர்த்து எடுத்த நிலைப்பாட்டைப் பாராட்டியே மொஜ்தபா கமேனி இந்தச் செய்தியை அனுப்பியுள்ளார்.

ஈராக்கின் இஸ்லாமிய உச்ச சபைக்கும் பாக்தாத் நகருக்கான ஈரான் தூதுவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பினைத் தொடர்ந்து இந்தச் செய்தி உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ஈரானுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் தனது குழுவினர் அந்நாட்டின் உயர்மட்ட நபர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், ஆனால் அவர் உச்ச தலைவர் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"ஈரானின் புதிய தலைவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா என்று கூடத் தெரியவில்லை" என்றும் அதிபர் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், ஈரானில் பதவியேற்ற மூன்றாவது உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .