2025 மே 19, திங்கட்கிழமை

'சமஸ்டி' என்ற சொல் பிரிவினை அல்ல: தண்டாயுதபாணி

Thipaan   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதூர்தீன் சியானா, பொன்ஆனந்தம், வடமலை ராஜ்குமார்

'சமஸ்டி' என்ற சொல் பிரிவினை அல்ல. சமஸ்டியை பிரிவினையாகக் காட்டுவதற்கு இனவாதத் தலைவர்கள் முயற்சிக்கின்றனர் என, கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா வளாகத்தில் இயங்குகின்ற ஐக்கிய இராச்சிய மிஷனைச் சேர்ந்த சிரேஷ்ட மனித உரிமைகள் ஆலோசகர் பொப்லாஸ்டும் இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய நல்லிணக்க ஆலோசகர் போல்கிறீனும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சரை,  திருக்கோணமலையில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

அதன்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு  தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்ற மாகாண சபைகள் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சனைகளுக்கான ஒரு தீர்வாகக் 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டதாகும்.

1987ஆம் ஆண்டின் மாகாண சபைகள் சட்டத்தின் வழியாக கொண்டுவரப்பட்ட இச்சபைகளின் அதிகாரங்கள் தமிழ் மக்கள் திருப்தியடையக் கூடிய அளவில் இருக்கவில்லை எனவும், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்பட்ட சந்தர்ப்பங்களையும் கல்வி அமைச்சர் இக்கலந்துரையாடலில் சுட்டிக் காட்டினார்.

மாகாண சபைகள் சட்டத்தின் பிரகாரம் ஆளுநர், மக்கள் பிரதிநிதிகளான முதலமைச்சர், அமைச்சர்கள் என்போரை விட அதிகாரம் மிக்கவராக இருப்பதனால் மக்களுடைய அபிலாஷைகளைத் தீர்த்து வைப்பதில் முரண்பாட்டு நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

13வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் மாகாண சபைகள் தொடர்பாக கூறப்பட்டுள்ள மாகாண நிரல், ஒதுக்கிய நிரல், ஒருங்கியை நிரல் முதலான விடயங்களிலும் கூட அதிகார மீறல் தொடர்பான நிலைமைகளும் ஏற்படுகின்றது.  சட்டமியற்றும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு உள்ளபோதிலும் அது வரையறைகளுக்கு உட்பட்டதாகவும் காலதாமதப்படுவதாகவும் அமைச்சர் எடுத்துக் காட்டினார்.

தற்போதைய அரசால் மேற்கொள்ளப்படும் அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். ஆனாலும் தமிழ் மக்களுடைய நீண்டகால அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடிய முறைமைகளை இந்த அரசியலமைப்பு திருத்தங்கள் கொண்டிருக்க வேண்டும். சுயாட்சியை அடிப்படையாகக் கொண்ட சமஸ்டிக் கட்டமைப்பை அரசியல் தீர்வுக்கான பிரதான உபாயமாகக் கொள்வது சிறந்த வழியாகும்.

தங்களது விவகாரங்களை தாங்களே கையாளக்கூடிய வகையில் அதிகாரங்கள் பிராந்திய ரீதியாக பகிரப்படவேண்டும். 'சமஸ்டி' என்ற சொல் பிரிவினை அல்ல. சமஸ்டியை பிரிவினையாகக் காட்டுவதற்கு இனவாதத் தலைவர்கள் முயற்சிக்கின்றனர்.

தமிழர்கள் இந்நாட்டில் ஏனைய இனத்தவர்களுடன் இணைந்து வாழத் தயாராக இருக்கின்றார்கள். எல்லா இனத்தவர்களும் சம உரிமை பெற்று சமாதானமாக வாழுவதை விரும்புகின்றார்கள். அந்த வகையில் அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்கக்கூடிய ஒரு ஆட்சி முறை இந்த நாட்டிற்கு அவசியமானது, என்பதையும் கல்வி அமைச்சர் எடுத்துக் காட்டினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X