2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பிள்ளைகளின் சிறந்த எதிர் காலத்திற்கு ஆங்கிலமும் தொழில்நுட்ப அறிவும் அவசியம்

Sudharshini   / 2014 நவம்பர் 17 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-ஏ.எம்.அப்துல் பரீத்

நமது பிள்ளைகளின் சிறந்த எதிர் காலத்திற்கு ஆங்கிலமும் தகவல் தொழில்நுட்ப அறிவும் மிகவும் அவசியமாகும் என திருகோணமலை மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.எம்.முஸ்ஹில் கூறினார்.

கிண்ணியா கிறீன்விச் சர்வதேசப் பாடசாலையின் வருடாந்த ஒன்று கூடலும் பரிசளிப்பு விழாவும் சனிக்கிழமை (15) கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீது மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

இன்று தகவல் தொழில்நுட்மே இந்த உலகை ஆட்சி செய்கின்றது. எங்கும், எதிலும் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு உண்டு. எனவே, விரும்பியோ விரும்பாமலோ நாம் அனைவரும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.

தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி அதன் நன்மைகளை பெற ஆங்கிலம் மிகவும் அவசியமானது. இந்த வகையில் ஆங்கிலம் இங்கு முக்கியம் பெறுகிறது. தமிழ் மொழி மூலம் ஆங்கிலத்தைக் கற்பதை விட ஆங்கில மொழி மூலம் ஆங்கிலச் சூழலில் ஆங்கிலத்தைக் கற்பது மிக விரைவான வெற்றியை ஈட்டித் தரும்.

ஆங்கிலமொழியை ஆங்கிலச் சூழலில் கற்பிப்பதில் சர்வதேசப் பாடசாலைகள் பெரும் பங்காற்றி வருகின்றன. இதனை அனுபவ ரீதியாக உணர்ந்த பெற்றோர் சிலர் இங்கு இருக்கின்றீர்கள். கிண்ணியாவில் இந்தப் பாடசாலை செயற்படுவதானது நமக்க பெரும் வரப் பிரசாதமாகும்.

வேறிடங்களில் பிள்ளைகளை நாம் அனுமதிப்பதால் பணச்செலவு, நேர விரயம், சிலவேளை பிள்ளைகளுக்கு வீட்டு ஞாபகங்கள் கூட வரலாம். இன்று இந்தப் பிரச்சினையில்லை.

இங்கு மேடையேற்றப்பட்ட கலைநிகழ்ச்சிகளை அவதானிக்கின்ற போது இப்பாடசாலையின் ஆற்றல் புலனாகின்றது. இப்பாடசாலை மென்மேலும் வளர வேண்டும். நல்ல அறிவு, ஆளுமையுள்ள  சமூகத்தை உருவாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வைபவத்தில் கிண்ணியா வலயக் கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.சீ.நஸார், கிண்ணியா மத்திய கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம்.ஹனிபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .