2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கடற்படை முகாமாகவுள்ள பாடசாலைகளை விடுவிக்க வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

2006ஆம் ஆண்டு தொடக்கம் கடற்படையின் முகாமாக பயன்படுத்தப்பட்டுவரும் திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் மகாவித்தியாலயத்தையும்; ஸ்ரீமுருகன் வித்தியாலயத்தையும்; மாணவர்களின் பயன்பாட்டுக்கு பெற்றுத்தர உதவுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா திங்கட்கிழமை (16) தெரிவித்தார்.

கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனுடன் கொழும்பிலுள்ள அமைச்சு அலுவலகத்தில்  வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற சந்திப்பின்போது, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்தப் பாடசாலைகள் நூறு வருடங்கள் பழமையானவை. தற்போது இயல்பு வாழ்க்கையும் நல்லாட்சியும் திரும்பியுள்ளதால்,   கடற்படையின் முகாமாக பயன்படுத்தப்பட்டுவரும் இந்த இரு பாடசாலைகளையும் மாணவர்களின் பயன்பாட்டுக்காக விடுவித்து  ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்படி இரண்டு பாடசாலைகளையும் சேர்ந்த சுமார் 750 மாணவர்கள் தற்சமயம் சேனையூர் மத்திய கல்லூரியின் மாணவர் தங்கும் விடுதியில் பல்வேறு வசதியீனங்களுக்கு மத்தியில் கற்று வருகின்றார்கள். அதேவேளை, ஆசிரியர்களும் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றார்கள்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் ஒரேயொரு சொத்தாக கல்வி மாத்திரம் எஞ்சியிருப்பதால், உடனடியாக கடற்படையினர் வசமுள்ள மேற்படி இரு பாடசாலைகளையும் விடுவித்து இந்த சமூகத்தின் கல்வி அபிவிருத்திக்கு உதவுமாறு தாம் கல்வி இராஜாங்க அமைச்சர், கிழக்கு மாகாணத்தின் புதிய முதலமைச்சர், புதிய ஆளுநர் ஆகியோரிடம் தமது அமைப்பு வேண்டுகோள் விடுப்பதாகவும் கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .