2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக முறைப்பாடு

Princiya Dixci   / 2015 மார்ச் 08 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

திருகோணமலை, கல்வி வலயத்தின் கல்வி நடவடிக்கைகள் சீர்குலைவு குறித்து திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா, ஞாயிற்றுக்கிழமை (08) தெரிவித்தார்.

கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கம், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக 10 விடயங்களைச் சுட்டிக்காட்டி, கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் இந்த முறைப்பாட்டை, வெள்ளிக்கிழமை (06) செய்துள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருகோணமலை மாவட்டத்திலே மிகப்பெரிய வலயம் திருகோணமலை நகர கல்வி வலயம் ஆகும். இந்த வலயம் முன்னொரு காலத்திலே போதியளவு வளங்களையும், பல முன்னணிப் பாடசாலைகளையும் கொண்டு, கிழக்கு மாகாணத்தின் ஏனைய வலயங்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வந்துள்ளது.

ஆனால், இவ்வலயம் இன்று பல்வேறு பின்னடைவுகளுடன் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற ஒரு வலயமாகவே மாறிவிட்டது. இதற்கு வலயக்கல்விப் பணிப்பாளரே பொறுப்புக் கூறவேண்டியவராகின்றார்.

ஏனெனில்,

வளப்பகிர்வு மற்றும் வள முகாமைத்துவம் இன்மை.

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவுகளில் மோசடி. பெரும்பாலான பாடசாலைகளில், உணவு விநியோகத்தை அதிபர்களே மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையினையும் வலயக் கல்விப் பணிப்பாளர் மேற்கொள்ளவில்லை.

ஆசிரியர்கள் மீதான பழிவாங்கற் செயற்பாடுகள்.

பாதிப்புக்குள்ளான ஆசிரியர்கள் நீதி கேட்டுச் சென்றால், அவர்களை சவாலுக்கு உட்படுத்தல்.

திட்டமிடலுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளரின், மத ரீதியான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கல்.

ஊழல் மிக்க இடமாற்றங்கள்.

நகரப் பாடசாலைகளில், மேலதிக ஆசிரியர்கள் காணப்பட்ட போதும், அதனைச் சீர் செய்வதற்கான திட்டமின்மை.

கல்விச் செயற்பாடுகளிலும், ஆசிரியர் நலன்களிலும் அக்கறைகொண்டு செயற்படும் ஆசிரிய தொழிற் சங்கங்களைப் பழிவாங்குதல்.

அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிற்றூழியர்களின் கோவைகளில் குறைபாடுகள் காணப்பட்ட போதும், அதனைச் சீர் செய்ய நடவடிக்கை எடுக்காமை.

திருகோணமலை வலயத்தை செயற் திறனற்ற வலயமாக மாற்றியமை ஆகிய செயற்பாடுகள் எம்மால் இனங்காணப்பட்டுள்ளன.

இதனால், மேற்கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தற்போதய வலயக் கல்விப் பணிப்பாளர், திருகோணமலை வலயத்துக்கு பொருத்தமற்றவராகிறார் என்பதனால் இவ்வலயத்துக்கு பொருத்தமான வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரை நியமித்து, திருகோணமலை கல்வி வலயத்தை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .