2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

அதிபரை மாற்றக்கோரி பாரிய போராட்டம்

Editorial   / 2026 மார்ச் 30 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரொசேரியன் லெம்பட்

மன்னார் அல்-அஸ்ஹர் மாதிரி மகாவித்தியாலயத்தின் கல்வி வீழ்ச்சி மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்தும், தற்போதைய அதிபரை மாற்றி தரம்-1 அதிபர் ஒருவரை நியமிக்கக் கோரியும் திங்கட்கிழமை  (30) அன்று பாடசாலைக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

  இப்பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தினர். கடந்த சில வருடங்களாக ஆசிரியர் ஒருவரே அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்று நடத்தி வருவதால், பாடசாலையின் கல்வித் தரம் மற்றும் அபிவிருத்திப் பணிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.

தரம் குறைந்த கல்வி நடவடிக்கைகளால் மாணவர்கள் ஏனைய பாடசாலைகளை நோக்கிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக முதலாம் தர அதிபர்   ஒருவரை நியமிக்காவிட்டால் தமது பிள்ளைகளை பாடசாலையிலிருந்து விலக்கப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

 போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த மன்னார் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் ஊர்வலமாக வலயக் கல்வி அலுவலகத்திற்குச் சென்று வலயக் கல்விப் பணிப்பாளரைச் சந்தித்தனர். இப்பாடசாலை மத்திய அரசின் கீழ் (தேசிய பாடசாலை) வருவதால், இது குறித்து உரிய அதிகாரிகளுடன் பேசி சாதகமான முடிவைப் பெற்றுத்தருவதாக வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதியளித்தார்.

  தொடர்ந்து மாவட்டச் செயலகத்திற்குச் சென்ற போராட்டக்காரர்கள், மன்னார் அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களைச் சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்தனர். 10 பேர் கொண்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசாங்க அதிபர் பின்வருவனவற்றைத் தெரிவித்தார்:

"தேசிய பாடசாலைகள் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ளன. தற்போதைய அதிபர் பல வருடங்களுக்கு முன்னர் கல்வி அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டவர். எனினும், பாடசாலையின் தற்போதைய வீழ்ச்சியைக் கருத்திற் கொண்டு, அதிபரை மாற்றுவது மற்றும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது குறித்துப் பத்து நாட்களுக்குள் சாதகமான பதிலைப் பெற்றுத் தருகின்றேன்."

அரசாங்க அதிபரின் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட போராட்டக்காரர்கள், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளித்துவிட்டுப் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .