2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

'இந்தியத் தொடரில் கமின்ஸ் விளையாடலாம்'

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 30 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிராக அடுத்தாண்டு ஆரம்பத்தில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரில், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பற் கமின்ஸ் விளையாடக்கூடுமென, அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு, 18 வயதானவராக தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட கமின்ஸ், அப்போட்டியில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, இறுதி நேரத்தில் துடுப்பாட்டத்திலும் பங்களித்திருந்தார். அதனால் அவர், அப்போட்டியின் நாயகனாகவும் தெரிவானார்.

ஆனால், அதன் பின்னர், உடற்றகுதிப் பிரச்சினைகள் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள பற் கமின்ஸ், இதுவரையில் மேலதிகமாக எந்தவொரு டெஸ்டிலும் விளையாடவில்லை. 5 ஆண்டுகளில் 18 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 15 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலுமே அவர் விளையாடியுள்ளார்.

இந்நிலையிலேயே, நியூசிலாந்து அணிக்கெதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில், பற் கமின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஓர் ஆண்டுக்கும் மேலான காலப்பகுதியில், அவுஸ்திரேலியக் குழாமில் அவர் சேர்க்கப்பட்டுள்ள முதலாவது தடவை இதுவாகும்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்டீவன் ஸ்மித், "அவர் (கமின்ஸ்) அதிக வேகத்துடன் பந்துவீசினார் போல் காணப்பட்டது. ஆகவே அணியில் ஸ்டார்க், ஹேஸல்வூட், கமின்ஸ் ஆகியோரைக் கொண்டிருப்பது சிறப்பானது. அது மிகவும் சிறப்பான உணர்வைத் தருகிறது" என்றார்.

பற் கமின்ஸ், அண்மைக்காலத்தில் அதிகப் போட்டிகளில் பங்குபற்றியிருக்கவில்லை என்றாலும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனது உடற்றகுதியை நிறைவேற்றுவதன் மூலமாக, இந்தியத் தொடருக்குத் தன்னை அவர் தயார்படுத்த முடியுமென ஸ்மித் குறிப்பிட்டார்.

"இந்த ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் விளையாடப் போகிறார். இந்தப் பருவகாலத்தின் இறுதியில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் விளையாடுவார் என தைரியமாகக் கூறுவேன். கிறிஸ்மஸுக்குப் பின்னர், ஷீல்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் பங்குபற்றுவார் என நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்த ஸ்மித், "இந்தியாவில் விளையாடுவது சாத்தியமானது. ஷீல்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி, எவ்வாறு நிலைமை உள்ளது என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது" என்றும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .