2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

110 ஓட்டங்களுடன் சுருண்டது இலங்கை

Shanmugan Murugavel   / 2017 ஜனவரி 03 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்,  கேப் டௌனில் நேற்று ஆரம்பமான இரண்டாவது போட்டியில், 110 ஓட்டங்களுடன் தமது முதலாவது இனிங்ஸில் இலங்கையணி சுருண்டுள்ளது.

துடுப்பாட்டத்தில், இலங்கையணி சார்பாக, உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 26, டிமுத் கருணாரட்ன 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கஜிஸ்கோ றபடா, வேர்ணன் பிலாந்தர் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து, பொலோ ஓன் வழங்காது, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவருகின்ற தென்னாபிரிக்க அணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், விக்கெட் இழப்பின்றி 35 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.  தற்போது களத்தில், டீன் எல்கர் 19, ஸ்டீவன் குக் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

முன்னதாக, முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்டு, முதலாம் நாள் ஆட்ட முடிவில், ஆறு விக்கெட்டுகளை இழந்து  297 ஓட்டங்களைப் பெற்றிருந்த தென்னாபிரிக்க அணி, தமது முதலாவது இனிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 392 ஓட்டங்களைப் பெற்றது. முதலாம் நாள் ஆட்ட முடிவில், 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இருந்த குயின்டன் டி கொக், நேற்று தனது மூன்றாவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்து 101 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். டி கொக் தவிர, முதல் நாளில் ஆட்டமிழந்த டீன் எல்கர் 129, அணித்தலைவர் பப் டு பிளெஸி 38, கேஷவ் மஹராஜ் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இலங்கையணி சார்பாக இளம் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

கைல் அபொட்டின் விக்கெட்டினைக் கைப்பற்றியதோடு, 356 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ரங்கன ஹேரத், இலங்கையணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்களில் இரண்டாமிடத்துக்கு முன்னேறினார். இதுவரை காலமும் இரண்டாமிடத்திலிருந்த சமிந்த வாஸ் 355 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்ததோடு, முதலாமிடத்திலுள்ள முத்தையா முரளிதரன், 795 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .