
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இலங்கையில் நடைபெற்று வரும் 7 போட்டிகள் அடங்கிய ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்களினால் டக் வேர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 35 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்களைப் பெற்றது. இதில் குமார் சங்ககார 63 ஓட்டங்களையும், லஹிறு திரிமான்னே 62 ஓட்டங்களையும். அஞ்சலோ மத்தியூஸ் 37 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக க்றிஸ் வோக்ஸ் 3 விக்கெட்களையும், க்றிஸ் ஜோர்டான் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இலங்கை அணியின் துடுப்பாட்டத்தின் நான்காவது ஓவரின் போது மழை குறுக்கிட்டமையினால் போட்டி 35 ஓவர்களுக்கு மாற்றப்பட்டது. இதன் படி 35 ஓவர்களில் டக் வேர்த் லூயிஸ் முறைப்படி 236 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்டது. ஜோஸ் பட்லர், ஜோ ரூட் ஆகியோரின் சிறந்த ஆறாவது விக்கெட் இணைப்பாட்டம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவியது. 84 ஓட்டங்களை 40.3 ஓவர்களில் இருவரும் இணைந்து பெற்றனர். இதில் ஜோஸ் பட்லர் 55 ஓட்டங்களையும், ஜோ ரூட் 48 ஓட்டங்களையும் பெற்றனர். மூயேன் அலி 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். அஞ்சலோ மத்தியூஸ் 2 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். ஜோஸ் பட்லர் போட்டியின் நாயகனாக தெரிவானார்.
இந்த தொடரில் 3 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கை அணி 2 இற்கு 1 என்ற ரீதியில் முன்னிலையிலுள்ளது.