2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஆடுகளத்தை விமர்சிக்கும் ஃபின்ஞ், மத்தியூஸ்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரின், கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆரம்பத்திலேயே வேகமாக ஓட்டங்களைக் குவித்து அவுஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு உதவி புரிந்த அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஆரோன் ஃபின்ஞ், இலங்கையணித் தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் ஆகியோர் ஆடுகளத்தை விமர்சித்துள்ளனர்.

கருத்துத் தெரிவித்துள்ள ஃபின்ஞ், கெத்தாராம ஆடுகளத்தை மோசமானது என வர்ணித்தார். இவ்வளவு சுழற்சிக்குள்ளாகும் ஆடுகளத்தில் தான் ஒருபோதும் விளையாடியதில்லை என்று கூறிய அவர்,  இரண்டாவது ஓவரிலிருந்தே பந்துகள் சுழல ஆரம்பித்ததாகவும், ஒவ்வொரு ஓவரிலும் வித்தியாசமான சுழற்பந்துவீச்சாளர் வீசுவது போன்று இருந்ததாக கூறியுள்ளார். தவிர, தங்களது பயிற்சி ஆடுகளங்கள் வித்தியாசமானதாக இருந்ததாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், 30ஆவது ஓவரிலிருந்து 33ஆவது ஓவருக்குள் மூன்று துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழந்ததே, போட்டியின் போக்கை மாற்றியதாகத் தெரிவித்த மத்தியூஸ், ஆடுகளமானது அதிகம் காய்ந்திருந்ததாகவும், துடுப்பாட்ட வீரர்களுக்கு கடினமாக இருந்ததாகவும், வேகப்பந்துவீச்சாளர்களின் மெதுவான பந்துகள் நின்று திரும்பியதாகவும், ஆடுகளமானது அதிக சுழற்சியை வழங்கியதாக கூறினார்.

அன்றைய வானிலையில் பந்து சுழலும் எனத் தங்களுக்குத் தெரியும் எனவும், ஆனால், எதிர்பார்த்ததை விட காய்ந்திருந்ததாகவும், இவ்வகையான ஆடுகளத்தில், தங்களது வித்தியாசமான பந்துகளால் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களும் பயன் பெறுவார்கள் என்று மத்தியூஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .