2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவுக்கெதிராக பலமான நிலையில் இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 09 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான  ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் முதலாம் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி பலமான நிலையில் உள்ளது.

ராஜ்கொட்டில் இன்று புதன்கிழமை (09), ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் அலிஸ்டியர் குக், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி, நேற்றைய முதலாவது நாள் ஆட்ட முடிவில், நான்கு விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், மொயின் அலி 99 ஓட்டங்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, ஜோ ரூட் 124 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். பந்துவீச்சில், இந்திய அணி சார்பாக, இரவிச்சந்திரன் அஷ்வின் இரண்டு விக்கெட்டுகளையும் இரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.  

ஒரு கட்டத்தில், மூன்று விக்கெட்டுகளை இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றிருந்த இங்கிலாந்து அணிக்கு, நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஜோ ரூட், மொயின் அலி இணை பெற்ற 179 ஓட்டங்களே, இங்கிலாந்து அணியை பலமான நிலைக்கு இட்டுச் செல்ல உதவியது.

இங்கிலாந்து அணி சார்பாக, ஆரம்பத் துடுப்பாட்டவீரராக ஹசீப் ஹமீட் அறிமுகத்தை மேற்கொண்டதுடன், மொயின் அலி, அடில் ரஷீட்டுக்கு மேலதிகமாக மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராக ஸபார் அன்சாரி அணியில் இடம்பிடித்தார். இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் ப்ரோட்டுக்கு, இப்போட்டி 100ஆவது டெஸ்ட் போட்டி ஆகும்.

இந்திய அணி, இப்போட்டியில் ஐந்து துடுப்பாட்டவீரர்களுடன், மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள், இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. இதன் காரணமாக, குழாமில் இடம்பெற்ற துடுப்பாட்டவீரர் கருண் நாயர் அல்லது வேகப்பந்துவீச்சு சகலதுறைவீரர் ஹர்டிக் பாண்டியா, டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்பட்டபோதும், இருவருமே அறிமுத்தை மேற்கொண்டிருக்கவில்லை.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .