2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

இந்தியாவின் வெற்றியைப் பறித்தார் சேஸ்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறை வீரர் றொஸ்டன் சேஸ் இறுதி நாளில் பெற்ற சதம் காரணமாக, இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே ஜமைக்காவில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, தமது முதலாவது இனிங்ஸில்ஜெர்மைன் பிளக்வூட்டின் 62 ஓட்டங்களோடு, சகல விக்கெட்டுகளையும் இழந்து 196 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பந்துவீச்சில் இரவிச்சந்திரன் அஷ்வின் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, லோகேஷ் ராகுலின் 158, அஜிங்கியா ரகானேயின் ஆட்டமிழக்காத 108 ஓட்டங்கள் துணையோடு, ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 500 ஓட்டங்களை பெற்று தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. பந்துவீச்சில், றொஸ்டன் சேஸ் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஒரு கட்டத்தில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 48 ஓட்டங்களையே பெற்றிருந்த போதும், றொஸ்டன் சேஸின் ஆட்டமிழக்காத 137, ஷேன் டௌரிச்சின் 74, அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டரின் ஆட்டமிழக்காத 64, ஜெர்மைன் பிளக்வூட்டின் 63 ஓட்டங்களோடு, ஆறு விக்கெட்டுகளை இழந்து 388 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது, போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொள்ள இந்திய அணித் தலைவர் விராத் கோலி சம்மதம் தெரிவித்தமையோடு போட்டி முடிவுக்கு வந்தது.

போட்டியின் நாயகனாக றொஸ்டன் சேஸ் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .