2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இன்று ஆரம்பிக்கிறது ஆசியாவின் முதலாவது 'மென்சிவப்பு டெஸ்ட்'

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 12 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மென்சிவப்பு டெஸ்ட் என அழைக்கப்படும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள், இன்று வியாழக்கிழமை, ஆசியாவில் தங்கள் அறிமுகத்தை மேற்கொள்கின்றன. பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியுடனேயே, அவை தமது அறிமுகத்தை மேற்கொள்கின்றன.

இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியே, பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது. டுபாயில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள், கடந்தாண்டு நவம்பரில் இடம்பெற்ற அவுஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான போட்டியுடன் அறிமுகமாகின. எனினும், அவ்வகை டெஸ்ட் போட்டிகளை, ஆசியா போன்ற அதிக வெப்பமுள்ள பிராந்தியத்தில் நடத்துவது, உடனடியாகச் சாத்தியமில்லை எனக் கருதப்பட்டது. ஆனால், இன்று ஆரம்பிக்கவுள்ள போட்டி, அச்சவால்களுக்கு மத்தியில் இடம்பெறவுள்ளது.

பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் மென்சிவப்புப் பந்து, சாதாரண டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் சிவப்புப் பந்துகளை விட, தாங்குதிறன் குறைந்தவை என்பதால், ஆசிய மைதானங்களிலும் ஆடுகளங்களிலும், அவை இலகுவாகச் சேதமடையும் என்ற அச்சம் காணப்படுகிறது. அதே அச்சத்தையே, இரு அணிகளின் வீரர்களும் வெளியிட்டுள்ளனர். ஆனால், சரித்திரபூர்வமான இப்போட்டியில் பங்குபற்றுவதற்கு, தாங்கள் ஆர்வமாக உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

டெஸ்ட் போட்டிகளின் தரப்படுத்தலில் அண்மைக்காலத்தில் முதலிடத்தைப் பெற்ற பாகிஸ்தான் அணி, அந்த இடத்தை இந்தியாவிடம் இழந்துள்ள போதிலும், 2ஆம் நிலை அணியாக, மிகவும் பலமான அணியாகக் கருதப்படுகிறது. எனவே, இந்தப் போட்டியிலும் தொடரிலும், அவ்வணிக்கே இலகுவான வெற்றி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .