Shanmugan Murugavel / 2016 ஜூலை 31 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் 26ஆம் திகதி, கண்டி பல்லேகலையில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியின் வெற்றி, சனிக்கிழமை மாலை நேரத்தில் பெறப்பட்டிருந்த நிலையில், இலங்கை அணியின் இரசிகர்களின் ஆதரவுக்காக, தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு நவம்பர் 11ஆம் திகதியிலிருந்து இப்போட்டி ஆரம்பிப்பதற்கு முன்புவரை, 3 வகையான போட்டிகளிலும் 32 போட்டிகளில் பங்குபற்றியிருந்த இலங்கை அணி, ஆறே ஆறு போட்டிகளில் மாத்திரமே வென்றிருந்தது. 22 போட்டிகளில் தோல்வியடைந்திருந்தது. 5 டெஸ்ட் போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்திருந்தது.
இந்தத் தொடர் ஆரம்பிக்கும்போது, உலகின் முதற்தர அணியாகக் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, முதலிடத்துக்கான பரிசையும் அதற்கான கோலையும், பகிரங்க நிகழ்வில் பெற்றுக் கொண்டால், இலங்கை வீரர்களின் மனோதிடம் பாதிக்குமெனத் தெரிவித்து, இரகசியமான முறையில் அதை மேற்கொள்ளுமாறு, இலங்கை கிரிக்கெட் சபை கோருமளவுக்கு நிலைமை இருந்தது. ஆனால், இலங்கையின் இளம் வீரர்களான குசால் மென்டிஸ், லக்ஷான் சந்தகன் ஆகியோரோடு, அனுபவ வீரரான ரங்கன ஹேரத் பிரகாசிக்க, இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தது.
வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்த மத்தியூஸ், "கடினமான ஆறு தொடக்கம் எட்டு மாதங்களைத் தொடர்ந்து, அந்த வெற்றி எங்களுக்குத் தேவைப்பட்டிருந்தது. அந்தக் காலத்தில், எங்களிடமிருந்து இரசிகர்கள் அப்பால் சென்றுகொண்டிருந்தார்கள். கிரிக்கெட் வீரர்களாக, அதை நாங்கள் உணர்ந்தோம், ஏனெனில், நாங்கள் சிறப்பாக விளையாடும் போது, அனைவரும் விரும்புவார்கள். நீங்கள் தோற்கும்போது கூட அவர்கள் விரும்பலாம், ஆனால் அவர்கள் ஏமாற்றமும் அடைவார்கள். இரசிகர்களுக்காக இந்தப் போட்டியை வென்றமை தான் சிறப்பானது. எங்களோடு இணைந்திருந்தவர்களுக்காக (இரசிகர்கள்) இது சிறந்த வெற்றி, இரசிகர்களுக்கு நாம் நன்றி கூறுகிறோம், ஏனெனில், அவர்களது வெற்றி, மிக முக்கியமானது" என்றார்.
"கடந்த ஆறு மாதங்களில், அணியாக நாங்கள், ஏராளமான விமர்சனங்களைச் சந்தித்தோம். ஆனால், விளையாட்டின் ஓர் அம்சம் தான் அது. நாங்கள் சிறப்பாகச் செயற்பட்டால் பாராட்டப்படுகிறோம். நாங்கள் மோசமாகச் செயற்பட்டால் விமர்சிக்கப்படுகிறோம். வீரர்களாக, அதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
இப்போட்டியின் நாயகனான குசால் மென்டிஸ், தனது 7ஆவது போட்டியிலேயே விளையாடியிருந்தார். முதன்முதலாக, நியூசிலாந்துத் தொடருக்காக அவர் சேர்க்கப்படும் போது, ஒரேயொரு முதற்தரப் போட்டியில் மாத்திரம் அவர் விளையாடியிருந்தார். அதிலும் அவர் சொல்லக்கூடியளவு பெறுபேற்றைக் காட்டியிருக்கவில்லை. இந்நிலையில், டெஸ்ட் குழாமுக்கு அவர் சேர்க்கப்பட்டமை தொடர்பாக, தனது கருத்துகளை மத்தியூஸ் வெளிப்படுத்தினார்.
"அவர் மிகவும் சிறந்த வீரரெனத் தேர்வாளர்கள் தெரிவித்தனர், ஆனால் அவரை நான் அதிகம் கண்டிருக்கவில்லை. நியூசிலாந்துக்கு நாங்கள் சென்ற பின்னர், குசால் மிகவும் விசேடமான வீரர் என நானும் நினைத்தேன். நியூசிலாந்திலும் இங்கிலாந்திலும் அவர் கடினமான தொடர்களை எதிர்கொண்டிருந்த நிலையில், முன்வரிசையில் அவர் சிறப்பாக விளையாடினார் என நினைத்தேன்" என மத்தியூஸ் குறிப்பிட்டார்.
இந்தப் போட்டியில் வென்ற போதிலும், இலங்கை அணி இன்னமும் முன்னேற வேண்டியிருப்பதாகத் தெரிவித்த அஞ்சலோ மத்தியூஸ், ஆனால் அணியின் மனோநிலை, சிறப்பான நிலையில் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .