2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

உலகக் கிண்ண போட்டியை நிர்ணயிப்பதை நிராகரித்த எல் சல்வடோர்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 06 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில், 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகளில், இன்று செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற கனடாவுக்கெதிரான போட்டியை நிர்ணயிப்பதற்கான கையூட்டை நிராகரித்ததாக எல் சல்வடோர் தேசிய கால்பந்தாட்ட அணி தெரிவித்தது.

பல்வேறுபட்ட சலுகைகளையும் கொடுப்பனவையும் நபரொருவர் வழங்குவதான ஒலிப்பதிவொன்றை, ஊடகவியலாளர் மாநாடொன்றில் வைத்து எல் சல்வடோர் அணி வீரர்கள் வெளியிட்டிருந்தனர்.

முழு அணியும் தங்களது பயிற்சியாளர்களுடன் வந்து, தாங்கள், சனிக்கிழமை (03) அணுகப்பட்டதாக தெரிவித்திருந்ததுடன், போட்டியை நிர்ணயிப்பதுக்கு முயன்றவருடனான 11 நிமிட உரையாடலை வெளியிட்டிருந்தனர்.

குறித்த நபர், ஒவ்வொரு வீரரும் வெளிப்படுத்தும் செயற்பாட்டுக்கேற்றவாறு பல்வேறு விதமான பணத்தை வழங்கவிருந்தார். போட்டியை நிர்ணயிப்பதுக்காக, வீரரொருவர், அதிகமாக 3,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை பெறவிருந்தார்.

மேற்குறித்த போட்டியை நிர்ணயிக்க முயன்றவர் எல் சல்வடோர் நாட்டைச் சேர்ந்தவர் என்றே கூறப்படுவதுடன், அவருக்கு, எல் சல்வடோர் அணி வீரர்கள் சிலரைத் தெரியும் என்றே கூறப்படுகிறது. அவர், ஹொண்டூரஸ் அணிக்கு உதவ முயன்றதாக கூறப்படுகிறது.

உலகக் கிண்ணத்துக்கு கனடா தகுதி பெறுவதற்கான வாய்ப்பை கொண்டிருக்க வேண்டுமாயின், வன்கூவரில் நேற்று இடம்பெற்ற போட்டியில், எல் சல்வடோரை கனடா வெல்ல வேண்டும் என்பதுடன், இறுதிச் சுற்று குழு “ஏ” போட்டிகளில், ஹொண்டூரஸை மெக்ஸிக்கோ வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இறுதிச் சுற்று தகுதிகாண் போட்டிகளுக்கு எல் சல்வடோர் தகுதி பெறவில்லை.

கனடா, எல் சல்வடோர், ஹொண்டூரஸ், மெக்ஸிக்கோ ஆகிய நாடுகள், வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன்‌ கால்பந்தாட்ட கூட்டமைப்புகளின் சம்மேளனத்தின் அங்கத்தவர்களாக உள்ளன. இதில், மூன்று நாடுகள், உலகக் கிண்ணத்துக்கு நேரடியாக தகுதி பெறுவதுடன், நான்காவது அணி,  ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் அணியொன்றுடன் தகுதிப் போட்டியில் விளையாடியே உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .