2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஒலிம்பிக் 2024: உத்தியோகபூர்வமாக விலகியது இத்தாலி

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 12 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான போட்டியிலிருந்து விலகுவதாக, இத்தாலிய ஒலிம்பிக் செயற்குழு, உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இத்தாலியின் தலைநகரமான றோம் நகரமே, இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு எதிர்பார்த்திருந்தது.

எனினும், றோமின் மேயராகப் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள வேர்ஜினியா றக்கி, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காகப் போட்டியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். நிதியியல் ரீதியாகச் சவால்களை எதிர்கொண்டுள்ள நகரம், அவற்றைத் தீர்த்த பின்னரே, போட்டிகளை நடத்துவது குறித்துச் சிந்திக்க முடியுமென்பது அவரது வாதமாகும். அவருக்கு ஆதரவு தெரிவித்த நகர சபை, மூன்றிலிரண்டு ஆதரவை, அவருக்கு வழங்கியது.

இதையடுத்தே, இப்போட்டியிலிருந்து விலகுவதாக, இத்தாலி அறிவித்துள்ளது. "அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான போட்டியிலிருந்து, றோம் நகரம் விலகிக் கொள்வதாக, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவின் தலைவருக்கு, நான் கடிதம் எழுதியுள்ளேன்" என, இத்தாலி ஒலிம்பிக் செயற்குழுவின் தலைவர் ஜியோவன்னி மாலகோ தெரிவித்தார்.

மூன்று ஆண்டுகளாகக் கடினமாக உழைத்த இச்செயற்றிட்டத்தைக் கைவிடுகின்றமை குறித்துக் கவலையடைவதாகத் தெரிவித்த அவர், சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவின் பணத்தையும், ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதால் ஏற்படக்கூடிய 177,000 வேலைவாய்ப்புகளையும் கைவிடுவதென்பது, பொறுப்பற்ற செயலாகும் என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .