Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலின் றியோ டி ஜெனீரோவில் இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள், ஓகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பித்து 21ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை 2020ஆம் ஆண்டில் நடத்தவுள்ள டோக்கியோ நகரத்தை, ஒலிம்பிக் கொடி சென்றடைந்துள்ளது.
ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவை, இன்று காலை சென்றடைந்த ஒலிம்பிக் கொடி, அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பான் ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ ஏற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளன. றியோ ஒலிம்பிக் போட்டிகள், வெற்றிகரமானவையாக அமைந்தாலும், சில வேளைகளில் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், சிறப்பானவையாக அமையுமென, ஜப்பானிய அதிகாரிகள் உறுதிமொழி வழங்குகின்றனர்.
டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், டோக்கியோவின் ஆளுநர் யுரிக்கோ கொய்க்கே, றியோ டி ஜெனீரோவிலிருந்து வந்த விமானமொன்றிலிருந்து இறங்கி, ஒலிம்பிக் கொடியை அசைத்தார். அவருடன், இம்முறை ஒலிம்பிக்கில் 41 பதக்கங்களை வென்ற ஜப்பானின் விளையாட்டு வீரர்களும் சேர்ந்து அணிவகுத்தனர்.
"இந்தக் கொடி கொண்டுவரும் பாரத்தை நான் உணர்கிறேன். 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தின் பின்னர், இந்தக் கொடியை மீண்டும் கொண்டுவர முடிந்தமை குறித்து நாம் மகிழ்வடைகிறோம்" என அவர் தெரிவித்தார். இறுதியாக, 1964ஆம் ஆண்டிலேயே, ஒலிம்பிக் போட்டியை டோக்கியோ நடத்தியிருந்தது.
ஒலிம்பிக் போட்டிகளைச் சிறப்பாக நடத்துவதாகத் தெரிவித்தே, இம்முறை ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பான் பெற்றதோடு, றியோ ஒலிம்பிக் இறுதி நிகழ்விலும், ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, அதையே வலியுறுத்தியிருந்தார். ஆனால், போட்டிகளை நடத்தும் வாய்ப்பை டோக்கியோவுக்கு வழங்கியமையில் ஊழல்கள் இடம்பெற்றனவா என்பது குறித்து, பிரான்ஸில் விசாரணைகள் இடம்பெறுவதோடு, டோக்கியோ ஒலிம்பிக்குக்கான இலட்சினை, இன்னோர் இலட்சினையிலிருந்து பிரதி செய்யப்பட்டதாகச் சர்ச்சை எழுந்திருந்த நிலையில், சவால்களுக்கு மத்தியிலேயே, தனது பயணத்தை டோக்கியோ ஆரம்பித்திருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .