2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

தடுமாறுகிறது இலங்கை: போராடுகிறார் தனஞ்சய

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 27 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், போர்ட் எலிஸபெத்தில் நேற்று (26) ஆரம்பமான முதலாவது போட்டியில், இன்றைய (27) இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி தடுமாறி வருகிறது.

தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று, தென்னாபிரிக்க அணியின் முதல் இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 105 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்றைய ஆட்டம், ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்பதாகவே முடிவுக்கு வந்திருந்தது.  

தற்போது களத்தில், தனஞ்சய டி சில்வா 43 ஓட்டங்களுடனும், டுஷ்மந்த சமீர ஏழு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

பந்துவீச்சில், தென்னாபிரிக்க அணி சார்பாக, வேர்ணன் பிளாந்தர் மூன்று விக்கெட்டுகளையும், கைல் அபொட் இரண்டு விக்கெட்டுகளையும், கேஷவ் மஹராஜ், கஜிஸ்கோ றபடா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

முன்னதாக, முதல் நாள் ஆட்ட முடிவில், தமது முதலாவது இனிங்ஸில், ஆறு விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றிருந்த தென்னாபிரிக்க அணி, சகல விக்கெட்டுகளையும் 286 ஓட்டங்களைப் பெற்றது.  

துடுப்பாட்டத்தில், தென்னாபிரிக்க அணி சார்பாக ஜீன் போல் டுமினி 63, ஸ்டீபன் குக் 59, டீன் எல்கர் 45, அணித்தலைவர் பப் டு பிளெஸி 37, விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக் 37 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், இலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த இனிங்ஸில், சுரங்க லக்மால் 63 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் போட்டிகளில், இனிங்ஸொன்றின் அவரின் சிறந்த பந்துவீச்சுப் பெறுதி இதுவாகும்.

சுரங்க லக்மால் தவிர, ரங்கன ஹேரத், நுவான் பிரதீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .