2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மழையால் போட்டி மீண்டும் பாதிப்பு: அஸார் அலி சதம்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெல்பேர்ண்ணில் நேற்று (26) ஆரம்பமான இரண்டாவது போட்டியில் இரண்டாவது நாளும் மழையினால் பாதிக்கப்பட்டிருந்தது.

முதல் நாள் ஆட்டத்தில் 50.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்த நிலையில், இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது 50.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்தன. இந்நிலையில், இப்போட்டியில் முடிவு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. எனினும், எதிர்வுகூற முடியாத பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தால் போட்டி முடிவு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை.

எவ்வாறெனினும், முதலாவது நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்படும்போது நான்கு விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றிருந்த பாகிஸ்தான் அணி, இரண்டாவது நாள் ஆட்டம் இடைநிறுத்தப்படும்போது ஆறு விக்கெட்டுகளை இழந்து 310 ஓட்டங்களைப் பெற்று உறுதியாக உள்ளது. ஆக, மிகமோசமாக விளையாடினால் மட்டுமே பாகிஸ்தான் அணி தோல்வியுறும்.

முதலாவது நாள் ஆட்டத்தின்போது 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்த அஸார் அலி, நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது சதத்தினைப் பூர்த்தி செய்து, இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 139 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மறுமுனையில், இரண்டாம் நாள் ஆட்டத்தின் பிற்பகுதியில் அஸார் அலிக்கு துணையாக ஓட்டங்களைப் பெற்ற மொஹமட் ஆமிர் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.  

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்த முதல் போட்டியின் நாயகனாக அசத் ஷபிக், 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சில், அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜக்ஸன் பேர்ட் மூன்று விக்கெட்டுகளையும், ஜொஷ் ஹேசில்வூட் இரண்டு விக்கெட்டுகளையும், நேதன் லையன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .