2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

வேகத்திலேயே வீழ்ந்தது இலங்கை: குலசேகர

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 17 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் இலங்கை தோற்றமைக்கு, மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர்களே காரணமென, இலங்கையின் நுவான் குலசேகர ஏற்றுக் கொண்டுள்ளார்.

இத்தொடரின் முதலாவது போட்டியில் சிம்பாப்வேயை அடித்துத் துவைத்த இலங்கை அணி, வெற்றிபெறும் நம்பிக்கையுடன் களமிறங்கியது. ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற 227 ஓட்டங்களுக்குப் பதிலளித்தாடும் போது, 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அவ்வணியின் வேகப்பந்து வீச்சாளர்களே, இலங்கை விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த குலசேகர, "சிம்பாப்வே அணியில், அவர்களிடம் திறமை உள்ளது. ஆனால் அவர், மணிக்கு 120 தொடக்கம் 130 கிலோமீற்றர் வேகத்திலேயே பந்துவீசுவர். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்கள் உயரமானவர்கள், எனவே அவர்கள் வீசும் பந்துகள், அதிகம் மீளெழும் தன்மை கொண்டவை. ஷனொன் கப்றியல், மணிக்கு 140 கிலோமீற்றருக்கு அதிகமாக வீசுபவர். ஜேஸன் ஹோல்டரும் மிகவும் சிறப்பாகப் பந்துவீசினார், அவருக்கு அவுட்ஸ்விங் கிடைத்தது" என்று தெரிவித்தார்.

அடுத்த போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமாயின், மாற்றங்களை உடனடியாகச் செய்ய வேண்டுமெனக் குறிப்பிட் நுவான் குலசேகர, துடுப்பாட்டம் தொடர்பாகவே அதிக கவனம் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

10 மாதங்களுக்குப் பின்பு இலங்கை அணியில் இத்தொடருக்காக இடம்பிடித்த குலசேகர, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, இறுதிநேரத்தில் அதிரடியாக ஆடவும் முயன்றிருந்தார். மீண்டும் போட்டிகளில் பங்குபற்றுவது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த குலசேகர, கடைசி 2 போட்டிகளிலும் தனது பெறுபேறுகள் தொடர்பாக மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .