2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'வடக்கு, கிழக்கு இணைப்பை ஏற்படுத்த வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

யுத்தம் ஓய்ந்து தற்பொழுது பாதைகள் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு இணைப்பை ஏற்படுத்தி   பயனடைய  வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா தெரிவித்தார்.

மயிலம்பாவெளி கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மா.விஸ்வநாதன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை (27) மாலை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, 'வடக்கு முன்னைய காலங்களில் கல்வியில் உயர்ந்திருந்ததைப் போன்று மீண்டும் கல்வியூடாக சமூகத்தை மேம்படுத்த வேண்டுமென்ற தூர நோக்குச் சிந்தனையுடன் கல்வியலாளர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதேபோன்று கிழக்கு மாகாணமும் கல்வியைக் கைவிடாது, வேறு எந்தவொரு மோசமான, கடுமையான ஈடுபடாமல் கல்வியை முன்னோக்கிக் கொண்டு செல்லவேண்டும்.

யுத்தம் ஓய்ந்துவிட்டது, கல்விக்குரிய ஆற்றல்களை கல்விக்குச் செலவழித்தால் வடக்கும் கிழக்கும் இணைந்து சிறந்ததொரு உன்னதமான சமூதாயத்தைக் கொண்ட பெரு நிலமாக உருவாகுவதற்கு வழிபிறக்கும்.

வடக்கில் உள்ள ஆற்றல்களை கிழக்கு மாகாணம் பயன்படுத்த முயற்சி எடுக்கவேண்டும். அதேவேளை வடக்கிலுள்ளவர்கள் கிழக்கிலுள்ள மிகச் சிறந்த மூல வழங்களையும் ஆற்றல்களையும் எவ்வாறு பயன்படுத்தலாம் என சிந்திக்கவேண்டும். வடக்கும் கிழக்கும் இணைந்து செயலாற்றினால் சிறந்ததொரு தமிழ் சமூகத்தை நாங்கள் உருவாக்க முடியும். அத்தகையதொரு தலைமைத்துவம் உருவாக வேண்டுமானால் ஒரேயொரு வழியாக கல்வி மட்டுமே உள்ளது' என்றார்.

 

நுண் கடன் தொடர்பான பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. நுண் கடன் தொடர்பாக சமூகத்தின் மத்தியில் எழும் பிரச்சினைக்குரிய விடயத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டது.  அதன் மூலம் நுண் கடன் தொடர்பாக எழும் பிரச்சினையை தீர்ப்பதற்கான சட்ட நடவடிக்கை மற்றும் பாதுகாப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.

நுண் கடன் வழங்குவர்களுக்கும் பெறுவர்களுக்கும் பல்வேறுபட்ட விழிப்புணர்வுகள் மற்றும் சட்ட ஆலோசனைகளும் வழங்கியபோதும் பிரச்சினைகள் அதிகரித்த வண்ணமுள்ளது. நுண் கடன் பிரச்சினையினால் நாளுக்கு நாள் இளம் குடும்பம் தொடக்கம் பெரியவர்கள் வரை தற்கொலைக்கு செல்கின்றதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. நாங்கள் வழங்கிய சட்ட நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு தொடர்பான விடயங்கள் சமூகத்தின் மத்தியில் சென்றடையவில்லையோ என்ற எண்ணம் என்னிடம் மேலோங்கியிருக்கிறது.

வடக்கில் போதை வஸ்த்து மற்றும் மதுபாவனை அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. அதன்மூலம் குடும்பம் உட்பட குடும்பத்திலுள்ள சிறு பிள்ளைகளின் வாழ்க்கை மற்றும் அவர்களின் கல்வி சீரழிந்து கொண்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அவிருத்திக்கு வழங்கப்படும் தொகையை விட மாவட்டத்தில் மதுபாவனைக்கு செலவழிக்கப்படும் தொகை அதிகரித்த வண்ணமுள்ளதை அண்மைக் கால புள்ளி விபரங்களில் அறியக்கூடியதாகவுள்ளது.

கல்வி நிலையில் உயர்ந்த இடத்தில் இருக்கின்றதான யாழில் போதைவஸ்த்து, வாள்வெட்டு, மது பாவனை போன்றவற்றினால் சீரழிந்து கொண்டு செல்வதை பார்க்கும்போது மன வேதனையடைகின்றோம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X