2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

13ஆவது திருத்தத்தை பாதுகாக்க கிழக்கில் விரைவில் பிரேரணை: த.தே.கூ

Kogilavani   / 2012 ஒக்டோபர் 31 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் வரை 13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்ற பிரேரணையை கிழக்கு மாகாண சபையில் விரைவில் முன்வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி; பிரதம கொறடாவுமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

13ஆவது திருத்தச்சட்டத்தினை நீக்குவது தொடர்பான விசேட பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ளதாகவும், அச்சட்டத்தை நீக்குவதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அமைச்சர்கள் இருவர்கள் தெரிவித்துள்ள கருத்து; தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு; தெரிவித்தார்.

ஆந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

தமிழ்மக்களுக்கு நியாயமான தீர்வு வழங்கக் கூடாது என விரும்புகின்ற அமைச்சர்கள் இருவரினால பாராளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்று கொண்டு வரவுள்ள நிலையில் இதற்கு சிறுபான்மையினரின் உரிமைகளை ஏற்றுக் கொண்ட யாரும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

13ஆவது திருத்தச்சட்டமானது சிறுபான்மை மக்களுக்கான தீர்வின் முதல் படியாகும்.இதனை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாகக் கைவிடப்பட்டாக வேண்டும் என்ற அடிப்படையில் கிழக்கு மாகாண சபையில் பிரேரணையைக் கொண்டு வரவுள்ளேன். 

அதேநேரம், தமிழ்க்களுக்கான நிரந்தரத் தீர்வுத்திட்டம் கொண்டு வரப்படும் வரையில் பல்வேறு இழப்புகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட தற்போது சிறிதளவேனும் நடைமுறையிலுள்ள இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு ஓரளவுக்கான நம்பிக்கைகளைக் கொடுத்துள்ள 13அவது திருத்தச்சட்டம் நீக்கப்படுவதனை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களுக்கு கொஞ்சமேனும் அதிகாரம், உரிமைகள் வழங்கப்பட்டு விடக்கூடாது என்பதில் தொடர்ச்சியாகவும் விடாப்பிடியாகவும் முயற்சிகளை மேற்கொண்டுவரும் பெரும்பான்மைச் சிந்தனையுடன் செயற்படும் மேலாதிக்கச் சிந்தனை கொண்டவர்கள் விட்டுக்கொடுப்பாக செயலாற்ற வேண்டும்.
இலங்கை சுதந்திரம் பெற்றது முதல், அகிம்சை ரீதியான போராட்டங்கள், முயற்சிகள், பின்னர் ஆயுத ரீதியான போராட்டங்கள் மூலமாக சொல்லொணா இழப்புகளை அனுபவித்த தமிழ் மக்கள் மேலும் மேலும் இழப்புகளையும் கொடுமைகளையும் அனுபவிக்கத் தயாரான நிலையில் இல்லை.
இதனை தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் அனைவரும் பலமுறைகளில் பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்தியிருக்கின்றனர் என்ற வகையில், தமிழ் மக்களுக்காக நிரந்தரத் தீர்வுத்திட்டம் கொண்டு வரப்படும் வரையில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை நீக்குவதற்கு யாரும் ஆதரவழிப்பது பொருத்தமானதல்ல.

தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் வழங்கக் கூடாது என்ற நோக்கில் செயற்படும் இரு அமைச்சர்களின் செய்பாடுகளுக்கு சிறுபான்மை அரசியல்வாதிகள் யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என நம்புகிறேன். நேர்மையான அரசியல்வாதிகளுக்கு அது பொருத்தமானதுமல்ல.

வடக்குக் கிழக்கை இணைத்து ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்காத வரையில் 13ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்குவதற்கு சிறுபான்மையினராகிய நாம் உடன்படுவது இக்காலத்துக்கு ஏற்படையதாக இருக்காது.  இதுதொடர்பாக கிழக்கு மாகாண சபையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனைகளை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளேன். அதே நேரம் ஆளம் தரப்பினருடனும் பேசவுள்ளேன்.

முழு இலங்கைக்கும் ஒரு தீர:வத்தரிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னோடியாகவும் காரண கர்த்தாகவும் இருந்தவர்கள் வட கிழக்கு மக்கள் என்பதனைப் புரிந்து கொண்டு கிழக்கின் சிறுபான்மையினரை பிரதிப்பலிக்கின்ற ஒரேயொரு மாகாண சபையாக இருக்கின்ற காரணத்தால் அனைத்து சிறுபான்மையினரும் இணைந்து முடிவெடுக்க சிறுபான்மை மக்களுக்கெதிராக கொண்டுவரவுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரான பிரேரணையைத் தடுப்பதற்கு முன்வாருங்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .