2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஜெயலலிதா ஈழத்தமிழர்களை கைவிடமாட்டார்: பா.அரியநேத்திரன் எம்.பி.

Suganthini Ratnam   / 2011 மே 15 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)      

தமிழ் நாட்டில் புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ள ஜெயலலிதா அல்லல்படுகின்ற ஈழத்தமிழர்களைக் கைவிடமாட்டாரென்று  நம்புகின்றோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடி - நொச்சிமுனை காந்தி சமுர்த்தி சங்கத்தின் வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில்; பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வறுமை காரணமாக அநேகமான பெற்றோர்  தங்களது பிள்ளைகளை  பாடசாலைக்கு அனுப்பமுடியாதுள்ளனர். இந்த நேரத்தில் புலம்பெயர் தமிழர்களின் பல அமைப்புகள் எமது மாணவர்களின் கல்வி விருத்திக்கு பெரிதும் உதவி புரிகின்றன. கனடாவிலுள்ள 'அன்புக் கரங்கள்' அமைப்பு இவ்வாறான உதவிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக வழங்கி வருகின்றது. இதை மாணவர்கள் நன்றாகப் பயன்படுத்தி பூரண பயன் பெற வேண்டும்.

எமது மாவட்டத்தில் கலாசார சீரழிவுகளை ஏற்படுத்தி கல்வியை மழுங்கடிக்கும் முகமாக சில தீயசக்திகளின் திட்டமிட்ட செயற்பாட்டால் தேவைக்கு அதிகமான முறையில் மதுபானச் சாலைகள் திறக்கப்பட்டுள்ளன.  எமது எதிர்கால சந்ததியினரை இதிலிருந்து காப்பாற்றவேண்டும். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இருப்பினும் கூட்டமைப்பின் எந்த விடயத்தையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டு செயற்படுத்தவில்லை.

யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்களாகியும் மக்கள் இன்னும் இடம்பெயர்ந்த நிலையில் அல்லல்படுகின்றனர். இந்த நேரத்தில் தமிழ் நாட்டில் புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ள  ஜெயலலிதா அல்லல்படுகின்ற ஈழத்தமிழர்களைக் கைவிடமாட்டாரென்று நம்புகின்றோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .