2026 மே 04, திங்கட்கிழமை

த.தே.கூ.வுக்கு வழிகாட்டியாக த.ம.வி.பு. கட்சி உள்ளது: முதலமைச்சர் சந்திரகாந்தன்

Kogilavani   / 2012 ஏப்ரல் 04 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ரி.லோஹித், சுக்ரி)


'பல தசாப்தகால அரசியல் வரலாற்றினைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் போன்ற கட்சிகளுக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இருக்கின்றது என்பதனை பார்க்கும்போது சந்தோசப்படுகின்றேன்' என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலாநந்த வித்தியாலயத்தின் மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முதலமைச்சர் சந்திரகாந்தன்,

'எமது கல்வித்துறை மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு காரணம் கடந்தகால அரசியல் தலைமைகளே. அவர்கள் விட்ட தவறுகளை நாம் விடுவதற்கு தயாராக இல்லை. எது எப்படி இருப்பினும் எமது பிரதேசம் சகல துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எனது எண்ணம்.

இன்றைய செய்திகளைப் பார்க்கின்றபோது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. பல தசாப்தகால அரசியல் வரலாற்றினைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் போன்ற கட்சிகளுக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இருக்கின்றது என்பதனை பார்க்கும்போது சந்தோசப்படுகின்றேன்.

கடந்த 18ஆம் திகதி மட்டக்களப்பிலே நாம் நடாத்திய எமது கட்சியின் தேசிய மாநாட்டுக்கு பெருந்தொகையான மக்கள் வந்திருந்தனர். அம் மாநாடு அரசியல் வட்டாரத்தில் பாரிய திருப்புமுனைகளையும், உணர்ச்சி வார்த்தைகளையும் வீரவசனங்களையும் மக்கள் மத்தியில் பேசி வாக்குகளைப் பெறுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் போன்றோரை வேலை செய்யவைத்திருக்கின்றோம்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் மட்டக்களப்பில் ஒரு தேசிய மாநாட்டினை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். எமது கட்சியின் தேசிய மாநாட்டின் பிரதிபலிப்பே இவ்வாறானதொரு தேசிய மாநாட்டினை கூட்டமைப்பினர் நடத்தத் திட்டமிடுவதற்கு காரணமாகும்.

பல தசாப்தகால அரசியல் வரலாற்றினைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எமது தேசிய மாநாட்டினை கண்டுதான் அவர்களும் ஒரு மாநாட்டினை நடாத்தவும்  கட்சிக்கு புதிய உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்ள திட்டமிட்டிருக்கின்றனர். எமது தேசிய மாநாட்டினை பார்த்தாவது ஞானம் பிறந்திருக்கின்றதே கூட்டமைப்பினருக்கு. உணர்ச்சி வார்த்தைகளை மட்டும் அள்ளி வீசி வாக்குகளைப் பெற்ற கூட்டமைப்பினரை மக்களுக்காக ஓடி வேலை செய்யவைத்திருகின்றோம்.

இதையே நாமும் எதிர்பார்க்கின்றோம். ஜனநாயக அரசியலில் போட்டித் தன்மை வேண்டும். அப்போதுதான் அரசியல் போட்டியின் காரணமாக அரசியல்வாதிகள் மக்களுக்காக ஓடி வேலை செய்வார்கள். எது எப்படி இருப்பினும் வெறுமனே நான்கு வருட அனுபவம் கொண்ட எமது கட்சி பல தசாப்தகால அரசியல் வரலாற்றினையும் பழுத்த அரசியல் தலைவர்களையும் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழிகாட்டியாகவும் அரசியல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முன்னுதாரணமாகவும் இருப்பதில் சந்தோசமே' என்றார்.

இந்நிகழ்வில் அதிதிகளாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப செயலாளரும் முதல்வரின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான அ.செல்வேந்திரன், கட்சியின் முக்கியஸ்தர் துரைநாயகம், கட்சியின் பொருளாளரும் முதல்வரின் ஊடகச்செயலாளருமான ஆ.தேவராஜா, கோட்டக்கல்வி அதிகாரி, பாடசாலையின் ஆசிரியர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.




 


  Comments - 0

  • Kethis Wednesday, 04 April 2012 06:27 PM

    இறைவா மக்களை காப்பாத்து

    Reply : 0       0

    Jawahir Wednesday, 04 April 2012 07:51 PM

    வெச்சார் பாரு ஆப்பு...... என்னமா பேசுறாரு தொர...

    Reply : 0       0

    அன்பாளன் Thursday, 05 April 2012 01:36 AM

    இருக்கிறது அரசியலில் அல்லவா? அப்படிதான் பேசுவார். இதெல்லாம் சகஜமப்பா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .