2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

'பட்டதாரி பயிலுனர் நியமனங்கள் குறித்து அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும்'

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                        (ரி.லோஹித்)
ஆறு மாத கால பயிற்சியின் பின் பட்டதாரிகளின் நிலையானது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. ஆறு மாதகால பயிற்சி பெற்ற அனைவரிற்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படுமா என்பது பற்றி இதுவரை எந்த உறுதிப்பாடும் வழங்கப்படவில்லை. இந்நிரந்தர நியமனம் தொடர்பாக மிக விரைவில் அரசு பட்டதாரி பயிலுனர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதோடு அவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டால் அது எவ்வித முறைகேடோ அரசியல் தலையீடோ இன்றி ஆண்டடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர் என வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தம்மிக்க முனசிஙக தெரிவித்துள்ளார்.

பட்டதாரி பயிலுனர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும்; தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்பொழுது இலங்கை பூராகவும் பட்டதாரிகளுக்கு ஆறுமாத காலம் பயிலுனர் பட்டதாரியாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் சில மாவட்டங்களில் ஆறு மாத காலப்பயிற்சி முடிவடையும் தறுவாயில் உள்ளன. சில மாவட்டங்களில் ஆறு மாத காலப்பயிற்சி முடிவடைந்துள்ளன.

இந்நிலையில் இப்பயிலுனர் பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளாவன

1. பயிற்சிக் காலத்தில் மாதம் ஒன்றிற்கு வழங்கப்படும் 10,000 ரூபாவானது அடிப்படைத் தேவைகள், போக்குவரத்துக்கு போதுமானதாக இல்லாதிருக்கும் போது அவர்களை வெளிக்கள பணியாளர்களாக அனுப்பும் போது அவர்களின் போக்குவரத்து செலவுகளால் செலவுகள் இரட்டிப்பாகின்றன. இதனால் பொருளாதாப் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.

2. அதுமட்டுமன்றி குறிப்பாக சில மாவட்டங்களில் அக்கொடுப்பனவுகள் உரிய நேரத்திற்கு இதுவரை வழங்கப்படவில்லை.

3. பட்டதாரிகள் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட சில அலுவலகங்களில் அவர்கள் தரக்குறைவாக நடத்தப்படுகின்றனர். அதாவது அவர்களை சகஊழியராக நோக்காமல், பழகாமல் அவர்களை தனிமைப்படுத்தும் நிலையும் சில நேரங்களில் கேலிகளுக்கும் உள்ளாகின்றனர். இதனால் பட்டதாரிகள் உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

4. சில அலுவலகங்களில் பயிற்சிநெறிக்கு சம்பந்தம் இல்லாத விடயங்களில் பட்டதாரிகள் பயன்படுத்தப்படுகின்றனர். இதனரல் அவர்களது கௌரவம் பாதிக்கப்படுகின்றன.

5. சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் தேவைக்காக பட்டதாரிகளை பயன்படுத்த முற்படுகின்றனர். அதாவது தற்போது இடம்பெறவுள்ள மாகாணசபைத் தேர்தலுக்காக பயிலுனர் பட்டதாரிகளின் நிரந்தர நியமனம் தொடர்பாகவும் அரசியல் லாப பிரசாரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

6. ஆறு மாத கால பயிற்சியின் பின் பட்டதாரிகளின் நிலையானது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. ஆறு மாத கால பயிற்சி பெற்ற அனைவரிற்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படுமா என்பது பற்றி இதுவரை எந்த உறுதிப்பாடும் வழங்கப்படவில்லை. இந்நிரந்தர நியமனம் தொடர்பாக மிக விரைவில் அரசு பட்டதாரி பயிலுனர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதோடு அவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டால் அது எவ்வித முறைகேடோ அரசியல் தலையீடோ இன்றி ஆண்டடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .