2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

உன்னிச்சை சம்பவத்தினூடாக முறுகல் நிலையை உருவாக்க முயற்சிக்கலாமென்ற அச்சம் நிலவுகின்றது: அமைச்சர் ரவூ

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

உன்னிச்சை சம்பவத்தின் மூலம் இரண்டு இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையை இந்தக் காலகட்டத்தில் உருவாக்குவதற்கு சில தீயசக்திகள் முயற்சிக்கக்கூடும் என்ற அச்சம் காணப்படுகின்றது. இதற்கு இரண்டு சமூகங்களும் துணை போய்விடக்கூடாது. பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் நாம் இருக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உன்னிச்சை, பாவற்கொடிச்சேனை கிராமத்தில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை தீக்கிரையாக்கப்பட்ட பள்ளிவாசலை நேரடியாகச் சென்று பார்வையிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"உன்னிச்சைக்கு நேரடியாக சென்று நிலைமைகளை பார்வையிட்டோம். முஸ்லிம்கள் உன்னிச்சையில் மீள்குடியேறுவதை தடுப்பதற்காகவே உன்னிச்சை பள்ளிவாசலுக்கு தீ வைத்தும் உன்னிச்சையில் முஸ்லிம் பெண் ஒருவரை வெட்டிக்காயப்படுத்தப்பட்டும் உள்ளது. இங்கு நிலைமையை இராணுவத்தினர் சுமூகமான நிலைமைக்கு கொண்டுவந்துள்ளனர். தீ வைத்து எரிக்கப்பட்ட பள்ளிவாசலை தற்காலிகமாக இராணுவத்தினர் புனரமைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடி இங்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளோம்.

இங்கு மீள்குடியேறியுள்ள 29 குடும்பங்களுக்கான  கொடுப்பனவு ஏற்பாடுகள் தொடர்பில் மீள்குடியேற்றம் செய்வதற்கான நிதியை பெற்றுக்கொள்வதற்கான  பத்திரங்கள் ஏற்கெனவே இங்கிருக்கின்ற பிரதேச செயலாளரிடம் கொடுக்கப்பட்டும் இவர்களுக்கான நிதியை பெற்றுக்கொடுக்க இங்குள்ள பிரதேச செயலாளர் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

இந்த அசம்பாவிதங்களில் ஈடுபடுகின்ற இந்த சுற்றுப்புறத்திலுள்ள ஒரு சிலர், இந்த உன்னிச்சையில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களை அடிக்கடி அச்சுறுத்தி வந்த நிலையை தொடர்ந்து நேற்று இங்கு மீள்குடியேறியுள்ள பெண்ணொருவரை வெட்டி காயப்படுத்தியிருப்பதோடு பள்ளிவாசல் மற்றும் குடியிருப்புக்களையும் தீக்கிரையாக்கியிருக்கின்றார்கள்

இவ்வாறான அசம்பாவிதங்களுக்கு இடம்கொடுக்காமல் இங்கு மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்ளவிருக்கின்றோம். அரசாங்கம் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என நினைக்கின்றேன்.

இவ்வாறான சம்பவங்களுக்கு இடம்கொடுப்போமானால் மீள்குடியேற்றம் சாத்தியமற்றதாகிவிடும். இங்குள்ள மக்களை அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதும் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக அவர்களுக்கு உத்தரவாதம் கொடுத்து முழுமுயற்சிகளையும் செய்து இந்த உன்னிச்சை பிரதேசத்தில் மீள்குடியேற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது நடைபெற்றுள்ள அசம்பாவிதம் மேலும் தொடராமல் இருப்பதற்கு நாம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.
இந்த உன்னிச்சை முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக தமிழத்; தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத் தரப்பிலே இருக்கின்ற தமிழ் அரசியல் முக்கியஸ்தர்களிடம் கலந்துரையாடவுள்ளேன்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .