2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

'எல்லோருக்கும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை ஜெனீவா மாநாடு பேசத் தவறிவிட்டது'

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)   

'இறுதி யுத்தத்திலே இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் பற்றி ஜெனீவா மாநாட்டில்  பிரஸ்தாபிக்கப்பட்டது. அது பேசப்படத்தான் வேண்டும். ஆனால், ஒருதரப்புக்கு மாத்திரம் மனிதாபிமானத்தை பற்றிப் பேச முடியாது. பல்லினங்கள் வாழ்கின்ற இந்த நாட்டிலே எல்லோருக்கும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேச ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு தவறி விட்டது. மனிதாபிமானத்தை விடப் பெறுமதியான வார்த்தை ஒன்று இருக்க முடியாது. ஆனால் இன்று சர்வதேசம் பேசுகின்ற மனிதாபிமானம் என்பது சுயநலமாக மாறி விட்டது' என உள்நாட்டு வர்த்தக கூட்டுறவுத்துறைப் பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஏறாவூரில் கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊர்ப்படுகொலையின் 22 வது வருட நிறைவு தினம் ஏறாவூர் காட்டுப்பள்ளிவாயிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத்,

'இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி பேச கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் தவறி விட்டது. ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முஸ்லிம்களைப் பற்றி எதுவுமில்லை. இதுவிடயமாக எவரும் எதுவும் செய்யவில்லை. வாயே திறக்கவில்லை. முஸ்லிம்கள் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகறியச் செய்வதற்கு ஒரே வழி வீதிக்கு வந்து போராட வேண்டும். எழுத வேண்டும். உலமாக்கள் உரத்துக் குரல் கொடுக்க வேண்டும். எழுத்தாளர்கள் எழுத வேண்டும். உலகில் பரந்து வாழும் தமிழ் மக்கள் தங்களது பிரச்சினைகளை உலகத்தின் கண்களுக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.

சர்வதேச சமூகம் முஸ்லிம்களுக்கெதிராக ஒரு கண்கட்டி வித்தையைச் செய்து கொண்டிருக்கின்றது. உலகம் முழுவதும் திட்டமிட்ட பேரழிவுகளைச் சந்திக்கும் சமூகமாக முஸ்லிம் சமூகம் இன்று இருந்து கொண்டிருக்கின்றது. அரபு வசந்தம் என்று கூறி முஸ்லிம்களுக்கு இழைக்கும் அநீதிகளை அதற்குள் மூடி மறைக்க நினைக்கின்றார்கள். அது அரபு வசந்தம் அல்ல. அது உலகில் பரந்து வாழும் ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கே ஒரு நெருப்புக்காய்ச்சல். நமது அரசியல்வாதிகளும் விசயம் தெரியாமல் வசந்தம் என்று பேசுகிறார்கள். அரபுலக வசந்தம் இங்கேயும் வரவேண்டும் என்று சிலர் அறிவீனமாகப் பேசிவிடுகின்றார்கள்.

மேற்குலக சக்திகளின் வஞ்சக வலை அது. முஸ்லிம் சமூகத்தைச் சீர்குலைப்பதற்கான சதியில் இன்று முஸ்லிம் சமூகம் சிக்குண்டு கிடக்கின்றது. நாங்கள் அப்பாவித்தனமாக எந்த விதமான அரசியல் இலக்குகளுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமக்குப் பாதிப்புக்கள்  வராமல் நாம் வாழ வேண்டும் என்று கருதினால் நமது ஒற்றுமைதான் மிக முக்கியம். நமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மறக்க வேண்டாம். மறந்தால் நமக்கு எதிர்காலமில்லை. ஆனால், மன்னிப்போம்' என்றார்.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஏறாவூர் நகரசபையின் தலைவருமான அலிஸாஹிர் மௌலானா, ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் தலைவர் எம்.எல்.அப்துல் லத்தீப் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0

  • eastman Tuesday, 14 August 2012 04:10 AM

    அய்யா நீங்க இப்ப முஸ்லிம் காங்ரஸ்ல இருக்கீங்க உங்க தலைவர் தான் அத சொன்னாரு... இதுக்குத்தான் ஒரு கட்சியில இருக்கனும் என்றது..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .