2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

'பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதை அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்'

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

இந்த அரசாங்கத்தினால், முஸ்லிம்களின் புனித வழிபாட்டுத்தலமான பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதை இந்த அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தன்மானமுள்ள முஸ்லிம் அமைச்சர்களாக இருந்தால் உடனடியாக  இவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினருமான அரசரட்ணம் சசிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை  நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட முஸ்லிம் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'இந்த அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் இன்னும் மஹிந்த ராஜபக்ஷவின் காலில் ஒட்டிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் முஸ்லிம்களின் புனித இடமான பள்ளிவாசல்கள் இந்த அரசாங்கத்தினால் உடைக்கப்படும்போதும் கூட இவர்கள் பேசாமடைந்தகளாகவே இருந்தனர்.

இந்த முஸ்லிம் அமைச்சர்கள் இன்னும் இந்த அரசாங்கத்தில் இருக்காமல் உடனடியாக இந்த அரசாங்கத்தைவிட்டு வெளியேறவேண்டும் என நான் முஸ்லிம் அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

கடந்த காலங்களைவிட இன்று தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. இந்தமுறை நடைபெறும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மூன்று ஆசனங்களை நிச்சயம் பெற்று வெற்றிபெறும்.
இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு வழங்க ஆயத்தமாக இல்லை. இன்று தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்களும் இந்த அரசாங்கத்தை எதிர்க்கின்ற நிலைமை அதிகரித்துவருகின்றது. நாளுக்குநாள் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு இந்த நாட்டில் உள்ள வறிய மற்றும் நடுத்தரமான மக்கள் வாழமுடியாத அளவு இந்த அரசாங்கம் இன்று மாறியுள்ளது.

இந்த நிலையில், மக்களின் மனதில் இன்று ஐக்கிய தேசியக்கட்சி காணப்படுகின்றது. எனவே தான் தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஐக்கிய தேசியக் கட்சியை முழுமையாக ஆதரிக்கவேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .