2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

வடக்கு, கிழக்கை இணைப்பதன் மூலம் மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கு த.தே.கூ. முயற்சிக்கின்றது: ஹிஸ்புல்லாஹ்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

வடக்கையும் கிழக்கையும் இணைப்பதன் மூலம் இந்த நாட்டில் மீண்டும் ஒருமுறை இரத்த ஆறு ஓடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்கின்றது. வடக்கு, கிழக்கு இணைவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஆதரவு வழங்குகின்றது. இதற்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும்  பேசுகின்றார் என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'அன்று முஸ்லிம்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று முஸ்லிம்களைப் பற்றி பேசுகின்றார்.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி;க்காலத்தில் முஸ்லிம்களுக்கு தனித்தரப்புத் தரமாட்டோம் எனக் கூறிய சம்பந்தன், இன்று முஸ்லிம்களுடன் இணைந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்போம் எனக் கூறுகின்றார்.

முஸ்லிம்களுக்கு தனித்தரப்புத் தரமாட்டோம் எனக்  கூறியதுடன், இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முஸ்லிம்களை கணக்கில் எடுக்காத சம்பந்தன் ஐயா இன்று முஸ்லிம்களைப் பற்றியும் முஸ்லிம்களுக்கும் தீர்வு வேண்டும் என்பதையும் கூறுகின்றார். இவ்வாறு சம்பந்தன் ஐயா கூறுவதற்கு காரணம் மஹிந்த ராஜபக்ஷதான் என்பதை முஸ்லிம்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

வடக்கையும் கிழக்கையும் இணைப்பதன் மூலம் இந்த நாட்டில் மீண்டும் ஒருமுறை இரத்த ஆறு ஓடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிசெய்கின்றது. வடக்கு, கிழக்கு இணைவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஆதரவு வழங்குகின்றது. இதற்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பேசுகின்றார்

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் மூதூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடத்திய தேர்தல் பிரசாரக் கூட்டங்களின்போது எனக்கு ஏசியுள்ளனர். இதை அடுத்து ஆத்திரமுற்ற மக்கள் இவர்களின் மேடையை உடைத்து கூட்டத்தை குழப்பியுள்ளனர்.

பின்னர் அப்துர் றஹ்மானின் லண்டனில் உள்ள மூதூர் நண்பர் ஒருவரின் வளவிற்குள் ஒலிபெருக்கி பாவிக்காமல் கூட்டத்தை நடத்துவதாக எனக்கு அங்குள்ள ஒருவர் தொலைபேசியில் கூறினார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் மற்றும் பொறியியலாளர் றஹ்மான் வாய்கூசாமல் தேர்தல் மேடைகளில் பொய்களை பேசுகின்றனர்.

என்னை அரசியலில் இருந்து ஓரம்கட்ட முயல்கின்றனர். போலியான அபிவிருத்தித் திட்டங்கள் என கூறுகின்றனர். கர்பலா வீதியை கார்ப்பட் வீதியாக போடவுள்ளதையும் காத்தான்குடி கடற்கரை வீதியை கார்ப்பட் வீதியாக போடவுள்ளதையும் பொய் எனக் கூறுகின்றனர். நான் வெறுமனே வீதிகளுக்காக கல் வைப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர். காத்தான்குடியில் 26 கிலோமீற்றர் வீதிகளை கார்ப்பட் வீதிகளாக போடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இறைவனின் கிருபையினால் அதன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் இவ்வாறுதான் பொய்களை நாகூசாமல் மேடையில் பேசுகின்றனர்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .