2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மறைந்த தலைவரினால் என்ன கொள்கைக்காக மு.கா. ஆரம்பிக்கப்பட்டதோ அதை இன்றைய தலைமை புதைத்துள்ளது: றிஷாட்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மறைந்த தலைவரினால் என்ன கொள்கைக்காக முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த அனைத்துக் கொள்கைகளையும் இன்றைய தலைமை அவரது மரணத்துடன் சேர்த்து புதைத்துவிட்டது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாழைச்சேனையில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'இன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் வெற்றிலைக்கு வாக்களித்தால் பள்ளிவாசல்கள் உடைக்கப்படும் எனக் கூறுகின்றனர்.  பள்ளிவாசலை உடைக்க வந்தவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரா என்று பார்த்தால் இல்லை. இந்த அரசாங்கத்திற்கு கெட்ட பெயர் வரவேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறான செயல் செய்யப்பட்டுள்ளது.

தம்புள்ளை பள்ளிவாசலை உடைப்பதற்கு தலைமை தாங்கிவந்தவர் தம்புள்ளை பிரதேசசபைத் தேர்தலில் ஜனாதிபதிக்கும் இந்த அரசாங்கத்திற்கும் எதிராக சுயேட்சையாக போட்டியிட்டவர். இதேபோன்று தெஹிவளையில் பள்ளிவாசலை உடைப்பதற்கு தலைமை தாங்கிவந்தவர் அமெரிக்காவின் முகவர் ஆவார். குருநாகலில் தலைமை தாங்கிவந்தவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் ஆவார். இதன் மூலம்  பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டமைக்கும் அரசாங்கத்துக்கும்  தொடர்புகள் இல்லை என தெட்டத்தெளிவாக விளங்குகின்றது.

பள்ளிவாசல் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் வீராப்போடு பேசும் ஹக்கீம் இந்த நாட்டின் உயர் சபையான நாடாளுமன்றத்திலோ அல்லது அமைச்சரவையிலோ எந்தச் சந்தர்ப்பத்திலாவது பேசாமல் வாய்மூடி மௌனியாக இருந்துவிட்டார். இவர் எந்த முகத்துடன் இங்கு வந்து வீராப்புப் பேசுகின்றார். இவ்வாறு சமூகத்தைப் பற்றி பேசவேண்டிய இடத்தில் பேசாமல் சமூகத்தை காட்டிக்கொடுப்பதற்காகவா மறைந்த தலைவரால் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்துகொள்ள வேண்டும்' என்றார்.

இதேவேளை, இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,

'இலங்கை -  இந்திய ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு இடப்பட்டிருந்த அடிமைச்சங்கிலி கிழக்கு தனியாக பிரிக்கப்பட்டபோது உடைக்கப்பட்டுள்ளது. அதை ஜீரணிக்கமுடியாத முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைக்க முயற்சிக்கின்றது.

வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு மீண்டும் எமது மாகாணத்தில் உள்ள மக்கள் அகதி வாழ்க்கை வாழ்வதற்கும் எமது மக்கள் நிம்மதியை இழந்து வாழ்வதற்குமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. முஸ்லிம்களுக்கு தொடர்ந்து பிரச்சினை இருக்கவேண்டும் என்றுதான் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் விரும்புகின்றது.

அரசாங்கத்தோடு  இருந்துகொண்டே தனித்துக் கேட்கின்றார்கள் என்றால் முஸ்லிம் காங்கிரஸின் தன்னிச்சையான முடிவு அல்ல.  தற்போதைய தலைவரது முடிவுகள் அனைத்தும் சர்வதேசத்தின் முடிவே தவிர, கட்சியின் சுதந்திரமான முடிவு அல்ல. முஸ்லிம் காங்கிரஸுக்கு சுதந்திரமாக முடிவு எடுக்கும் அதிகாரம் மறைந்த தலைவரோடு மரணித்துவிட்டது.

வடக்கில் இருந்து முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றியபோது, உடனடியாக வெளியேற வேண்டும் என்று மிகவும் மும்முரமாக இருந்தவர் தமிழ்ச்செல்வன். அவர் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலில் கொள்ளப்பட்டபோது நாட்டில் உள்ள அநேகமானர்கள் சந்தோஷப்பட்டுக்கொண்டு தக்களது சந்தோஷங்களை வெளிக்காட்டிக்கொண்டிருந்தனர். இந்த வேளையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் நாடாளுமன்றத்தில் அவரது மறைவுக்காக அனுதாபப்பட்டு உரையாற்றினார்.

எமது சமூகத்தின் தேவைகள் பற்றி பேசுவதற்கு எவ்வளவோ இருக்கும்போது, முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவமானது சர்வதேசம் எதைக் கூறுகின்றதோ அதைப்பற்றி மட்டும்தான் பேசுவார்' என்றார்.



  Comments - 0

  • Riyas Friday, 31 August 2012 01:46 PM

    ரிஸாட் , அமைச்சரே , தற்போது நாட்டில் பள்ளிவாயல்களுக்கு எதிரான தாக்குதல்கள் உண்டு என்பதை உங்களின் பேச்சு தெளிவாக்குகின்றது. நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் சுதந்திரக் கட்சிக்கார்களாகத்தான் இருக்க வேண்டுமா ? அவா்கள் செய்தால்தான் அரசாங்கம் அவா்களை தண்டிக்குமா ? அப்படியென்றால் புலிகள் சுதந்திரக் கட்சிக்காரா்களா ? அல்லது சிறைகளில் உள்ளோர் சுதந்திரக் கட்சிக்காரா்களா ? இல்லை நீங்களும் உங்கள் அரசும் கையாலாகாதவா்களா ? அல்லது நாட்டில் வேறு அரசாங்கம் உண்டா ? முதலில் எந்த குற்றவாளிகளையும் கட்டிவளக்காமல் அவா்களை சட்டத்தின் முன் கொண்டுவர முயற்சியுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .