2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

'என்னை ஆதரித்து வாக்களித்த தமிழினத்துக்கு தலை வணங்கி என் பணி தொடர்வேன்'

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 16 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

என்னை ஆதரித்து வாக்களித்த தமிழ் இனத்துக்கும் தன்மான தமிழ் இனத்துக்கும் தலை வணங்கி என் பணியைத் தொடர்வேன்.  சிலர் சொல்வது போன்று காசுக்காக கட்சி மாறமாட்டேன். சோரம் போகின்ற ஒரு தமிழனாக நான் வாழமாட்டேன். இது என் உயிர் உள்ள வரையில் தமிழ் இனத்துக்காக என் உயிரைக்கூட தியாகம் பண்ணவும் காத்துக்கொண்டிருக்கின்றேன் என கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நகரில் உள்ள ரெலோ அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை, தனக்கு ஏற்பட்டுள்ள அச்ச நிலை மற்றும் தன்னைப்பற்றி வெளிவந்துகொண்டிருக்கும் அரசாங்கத்துடன் இணைவது தொடர்பான கருத்துக்கள குறித்து விளக்கமளிக்கும் வகையிலேயே அவர் இந்த ஊடகவியலார்கள் சந்திப்பை ஏற்பாடு செய்தார்.

இந்த  ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கிழக்கு மாகாண தேர்தலில் வெற்றி பெற்ற கோவிந்தன் கருணாகரம் (ஜனா) இந்திரகுமார், நித்தியானந்தன் (பிரசன்னா) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'65ஆம் ஆண்டு முதல் தமிழ் இனத்துக்குச் செய்யக் கூடிய அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன். நான் பாமர வர்க்கத்தைச் சேர்ந்தவன்.
படித்தவனும் அல்ல, பணக்காரனும் அல்ல. தமிழ் பண்பாளன் என்பதை ஞாபகமூட்ட விரும்புகிறேன். எதிர்வருகின்ற காலத்திலும் என்னை ஆதரித்து வாக்களித்த தமிழ் இனத்துக்கும் தன்மான தமிழ் இனத்துக்கும் தலை வணங்கி என் பணியைத் தொடர்வேன். சிலர் சொல்வது போன்று காசுக்காக கட்சி மாறமாட்டேன். சோரம் போகின்ற ஒரு தமிழனாக நான் வாழமாட்டேன். இது என் உயிர் உள்ள வரையில், தமிழ் இனத்துக்காக என் உயிரைக்கூட தியாகம் பண்ணவும் காத்துக்கொண்டிருக்கின்றேன்.

பிறந்தேன், வாழ்ந்தேன், இறந்தேன் என்று இல்லாது எமது தமிழ் இனத்துக்கு எமது வாழ்நாளில் எதைச் செய்தேன் என்று காட்டுவதுததான் எனது நோக்கம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எனக்கு முன் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்யாத அபிவிருத்தியையும் தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது எனது அவா. அந்த வகையில் இலங்கையன் என்ற உணர்வோடு தன்மானத் தமிழனாக வாழ்வேன். அதனால் இந்த அரசாங்கம் அல்ல எந்த அரசாங்கம் வந்தாலும் தன்மானம் இழந்த தமிழனாக வாழ நான் தயாரில்லை என்பதை இங்கு மட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் எனது கருத்தைச் சொல்ல விரும்புகின்றேன்.

நான் சார்ந்த கட்சிக்கும் தமிழ் இனத்துக்கும் அதன் அபிலாஷைகளுக்கும் எந்த வகையிலும் அவதூறு ஏற்படும் வகையில் நடக்கமாட்டேன். அத்துடன், அதற்கு களங்கம் ஏற்படும் வகையில் எந்த முடிவினையும் எடுக்க மாட்டேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன். இது உறுதி.
தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்தது தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றெடுப்பதற்காகவே தவிர, இந்த நாட்டின் ஆளும் கட்சிக்கு செல்வதற்காக அல்ல.

என்னை நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசாங்கத்திற்கு அழைப்பதற்காக நடைபெற்று வருகின்ற செய்தியை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்களின் முயற்சிகளுக்கு நான் கூறிய பதில் எனக்கு வாக்களித்த மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப நடப்பேனே தவிர, அதற்கு மாறாக நடக்க மாட்டேன் என்பதே ஆகும். இதனை நான் மேலும் நிரூபித்துக் காட்டுவேன். என் தாய் மேல் உறுதி. அரசியலில் நான் மட்டுமே ஈடுபடுகிறேன். என் குடும்பமல்ல. வெற்றிக் கொண்டாட்டத்தினை நடத்த வேண்டிய நான் வீதி வீதியாக சென்று திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனது குடும்பத்துடன் யாரும் தொடர்புகொள்ளவோ பேசவோ வேண்டியது இல்லை. என்னுடன் நேரடியாகப் பேசலாம். என் மக்களின் அபிலாஷைகளுக்காகவே நான் போராடுவேன்' என்றார்.

இப் பத்திரிகையாளர் மாநட்டில், உங்களுக்கு ஏற்பட்டுள்ள இச்சிக்கலான பிரச்சினை தொடர்பில் கட்சித் தலைமை என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனக் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், இப்பிரச்சினை தொடர்பில் கட்சிக்கு தெரியப்படுத்தியது முதல், எனது பாதுகாப்பு மற்றும் ஏனைய விடயங்கள் குறித்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

அதேநேரம் என்போன்று சக மாகாண சபை உறுப்பினர்கள் பலருக்கும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்தாக அறிகிறேன். அதனால், கட்சியும் அறிவித்திருக்கிறது. எனது பாதுகாப்புக்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருமாறு மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் விண்ணப்பித்திருக்கிறேன் பொலிஸ் மா அதிபரின் அனுமதி கிடைத்ததும் வழங்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார் எனக் கூறினார்.


  Comments - 0

  • P.Sabeshan Sunday, 16 September 2012 05:24 PM

    வெள்ளிமலை ஐயாவின் கொள்கை ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்களிடையேயும் கானப்பட்டால் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கலாம்.

    Reply : 0       0

    kajenthiran Monday, 17 September 2012 03:39 AM

    ஜனாதிபதி தேர்தலில் சிலர் உங்களை தாக்கி காயப்படுத்திய பின்பு சரத் பொன்சேகாவின் பிரசார மேடையில் அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்ததை நாங்கள் மறக்கவில்லை………….

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .