2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மட்டு. பட்டதாரி பயிலுனர் நியமனத்தில் அரசியல் பழிவாங்கல், பாரபட்சம்: பொன்.செல்வராசா எம்.பி

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 26 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் ஏற்கனவே உள்வாங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்குப் பதிலாக சில பிரதேச செயலகங்களில் மாகாணசபைத் தேர்தலின் பின் புதியவர்கள் உள்வங்கப்பட்டமை அரசியல் ரீதியான பழிவாங்கலும் பாராபட்சமும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் அல்லது அக்கட்சியுடன் தொடர்புடையவர்கள் என பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர்கள் நான்கு பேரில் இருவரினால் அடையாளம் காணப்பட்ட பட்டதாரி பயிலுனர்களே அந்த பழிவாங்களுக்கும் பாராபட்சத்திற்கும் உள்ளானதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பயிலுனர் பட்டதாரிகளின் தற்போதய நியமனங்கள் தொடர்பாக மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

'நாடெங்கிலும் வேலையற்ற் பட்டதாரிகள் பயிலுனர்களாக பத்திரிகைகளில் விண்ணப்பம் கோரப்பட்டு விண்ணப்பித்து நான்கு மாதங்களுக்கு முன்பு இணைந்து கொண்டார்கள். அதன் பின்னர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பிரதேச செயலகங்களில் அந்த பட்டதாரிகயளில் ஒரு பகுதியினர் உள்வாங்கப் பட்டார்கள். 

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை நேர்முகப் பரீட்சை நடைபெற்று 426 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். இவர்கள் கடந்த நான்கு மாதங்களாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வரும் வேலைகளில்தான் பயிலுனர்களாக ஈடுபட்டுவந்தார்கள்.

அண்மையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர்கள் எந்த பிரதேச செயலகத்தில் பணியாற்றுகிறார்களோ அந்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கிகரிக்க வேண்டும் என்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள்  அரசியல்வாதிகள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ், பசீர் சேகுதாவூத் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் மாகாண சபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் இந்த தலைமை பதவியை வகிக்கின்றார்கள்.

இவர்களில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லஹ், மாகாண சபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய இருவரும்தான் ஏற்கனவே பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்வாங்கபட்ட பட்டதாரி பயிலுனர்களில் தங்களுக்குப் ஏற்புடையதாக அல்லாத பயிலுனர்களை நீக்கிவிட்டு தங்களுக்கு ஏற்புடையவர்களை உள்வாங்கியுள்ளார்கள்.

இவர்களுடைய சிபாரிசின் பேரில் அண்மையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டு தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள பயிலுனர்களுக்கும் நியமனக் கடிதங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தன.

ஏனைய இரு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர்களான பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் தனது பிரதேச செயலகங்களில் ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களை எவ்வித மாற்றங்களுமின்றி நியமித்துள்ளார்கள்.

இந்நிலையில் அதிகாரிகளினால் நேர்முகப்பரீட்சையில் தெரிவுசெய்யபட்ட நியமனங்களில் அரசியல்வாதிகள் மாற்றம் செயதிருப்பது அரசியல் ரீதியான பழிவாங்கள் மற்றும் பாராபட்சம் மட்டுமல்ல தந்த பட்டதாரி பயிலுனர்களின் அடிப்படை உரிமையும் மீறப்பட்டுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது. 

குறிப்பாக கூறப்போனால் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னரதான பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் 426 பேர் உள்வாங்கப்பட்டிருந்தார்கள் மாகாண சபைத் தேர்தலில் பின்புதான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் சிபாரிசு செய்யவேண்டும் என்ற தீர்மானமெடுக்கப்பட்டு இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது. 

பாதிப்புக்குள்ளான பட்டதாரி பயிலுனர்கள் தமது புறகக்ணிப்பை உரிய பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவர்களிடம் சுட்டிக்காட்டிய போது அவர்களே கூறியிருக்கிறார்கள் தமிழ் தேசிய கூட்டமைபப்பற்கு வாக்களித்ததற்காகத்தான் இப்படி செய்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலில் பின்னரான அரசியல் பழிவாங்கலாகவே இதனை கருத வேண்டியுள்ளது' என்றும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .