2026 மே 04, திங்கட்கிழமை

கிழக்கு விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு மகஜர்

Menaka Mookandi   / 2013 மார்ச் 18 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

அதிகாரிகள் தொடர்ந்தும் அசமந்தப்போக்கை கடைப்பிடித்தால் கிழக்கின் விவசாயிகள் குறிப்பாக தமிழ் விவசாய குடும்பங்கள் தொடர்ந்தும் வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுவது இயலாத காரியமாகலாம். நாட்டின் முதுகெலும்பாக உழைக்கும் இவ் விவசாயிகளை சரியானமுறையில் கவனிப்பது இன்றியமையாத ஒன்றாகும் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது,

கிழக்குத்தமிழ் விவசாய குடும்பங்களை சுறண்டும் இடைத்தரகர்களிடமிருந்து அம்மக்களை உடன் காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு, பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர்கள் ஜனாதிபதிக்கு அவசர வேண்டுகோளிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம் அண்மைக்காலத்தில் பாரிய அனர்த்த பாதிப்புகளுக்கு முகம்கொடுத்த ஓர் மாவட்டமாகும்.
இயற்கையாகவே கடின உழைப்பும் வந்தாரை வரவேற்கும் பண்பும்கொண்ட இப்பிரதேசவாழ் மக்கள் தொடர்ச்சியாக அனர்த்தங்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை.

 இத்தனை இழப்புகளுக்கு மத்தியில் அவர்கள் இம்முறை காலபோகத்தில் தமது வயல்நிலங்களை விதைத்துவிட்டு காத்திருந்த வேளையில்,அடைமழை,வெள்ளப்பெருக்கு என்பவற்றால் அநேகமான வயல் நிலங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அழிவடைந்தன. இந்த வேளையில் அவர்கள் எஞ்சிய வேளாண்மையை விற்பதற்கு முயற்சித்த வேளையில் அக்கொள்வனவுக்கு உரிய நடைமுறைகள் உரிய காலத்தில் எடுக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

 மட்டக்களப்பை எடுத்துக்கொண்டால் படுவான்கரை,எழுவான்கரை என இரு பாகங்களாக அவதானிக்கலாம். இதில் எழுவான்கரை பாகமானது கடல்சார்ந்த பிரதேசமாகும். இங்குதான் அநேகமானோர் வாழ்கிறார்கள். அடுத்து படுவான்கரை பாகத்தை எடுத்துக்கொண்டால் இதுவே விவசாயம் விளையும் பூமியாகும். இது ஆற்றின் மறுபுறம் காணப்படுகின்றது.

 1970 களில் அதிக உற்பத்தி கண்டது இப்பிரதேசம். இங்கு உற்பத்தி செய்யப்பட்ட உணவுத்தானியங்கள் நாட்டின் ஏனைய பாகங்களுக்கும் எடுத்துச்செல்லப்பட்டன. ஆனால் இன்று அந்நிலை இல்லை. இடையே யுத்த காரணங்களால் விவசாய நிலங்கள் பல கைவிடப்பட்டன. 2500 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய இம்மாவட்டத்தில் 65000 இற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வாழ்கிறார்கள். 65000 விவசாய குடும்பங்களில் 25000 குடும்பங்களே இருபோகமும் செய்கிறார்கள். ஏனைய 40000 குடும்பங்களும் ஒரு போகம் மாத்திரமே செய்கிறார்கள். ஒரு ஆண்டினை கருத்திற்கொண்டால்  சிறுபோகத்திற்க்கான  பயிர் செய்யக்கூடிய மொத்த நிலப்பரப்பு 53368 ஏக்கர் ஆகும். இதில் பாரிய நீர்ப்பாசன திட்டத்தில் 5998  ஏக்கரும் தங்கியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போகத்தில் ஆகக்கூடுதலாக 151463(ஒரு இலட்சத்து   ஐம்பத்து ஓராயிரத்து நானூற்று அறுபத்தி மூன்று ) ஏக்கர் பயிர்ச்செய்கை பண்ணப்படுகின்றது. இதில் 51344 ஏக்கர் பாரிய நீர்ப்பாசன திட்டத்தின் ஊடாகவும், 16645 எக்கர் சிறு நீர்ப்பாசன திட்டத்தின் ஊடாகவும்   ஏனைய 83474 ஏக்கர் மழையை நம்பி (வானம் பார்த்த பூமி) ஆகவும் விவசாயம் செய்கின்றார்கள். இதில் ஏறக்குறைய 55 வீதமான வயல்கள் மழையை நம்பியே உள்ளன.

 கடந்த ஆண்டு 15000 இற்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை. 151463 ஏக்கரில் அறுவடை இடம்பெற்றது 136974 ஏக்கரிலேயே ஆகும். கடந்த வெள்ள அனர்த்த நிலைமைகளால் பாத்திப்படைந்த விவசாயிகளுக்கு அவர்களின் நெல்லை ஒரு மூடை 2000 ரூபாவிற்கு கொள்வனவு செய்வதாக அரசாங்கம் அறிவித்த போதிலும் நெற் சந்தைப்படுத்தும் சபை சரியான வேளையில் நெற் கொள்வனவை மேற்கொள்ளாததனாலும் உரிய அதிகாரிகளின் அசமந்த போக்கினாலும் விவசாயிகள் வெறும் 980 ரூபாவிற்கு கூட நெல்மூடைகளை விற்பனை செய்யவேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

 இதில் இன்னுமொரு விடயமாக இடைத்தரகர்களின் மறைமுக செயற்பாடுகளையும் கூறலாம். அதாவது விவசாயிகளுக்கு கடனாக பணம் கொடுத்தல், உரவகைகளை கொடுத்தல், அறுவடை இயந்திரத்தை கொள்வனவு செய்ய சிரமப்படும் விவசாயிகளுக்கு அத்தகைய உபகரணங்களை கடனாக பெற்றுகொடுத்தல் போன்ற சிறு சிறு விடயங்களில் உதவுவதாக செயற்பட்டு பின்பு வேளாண்மை காலத்தில் அதனை உடன் அறவீடு செய்யவேண்டி குறைந்த (அறாவிலை) விலையில் வேளாண்மை விளைவை சுரண்டி விடுகின்றனர்.

 வேளாண்மை விளைவதற்கு அத்தியாவசியமாக காணப்படும் நீர்ப்பசனதிட்டங்களை எடுத்துக்கொண்டால் 1970௧980 களில் பல கோடிகணக்கான செலவில் உருவாக்கப்பட்ட "மாதுறு ஓயா'' திட்டம் தமிழ் விசாயிகள் வாழும் பிரதேசங்களை அண்டி அமைக்கப்படவில்லை. இதனால் தமிழ் விவசாயக்குடும்பங்கள் நிர்க்கதியாகினர். அதுமாத்திரமல்ல இன்னும்பல குளங்கள் சரியான முறையில் புனரமைக்கப்படவில்லை. நாடளாவியரீதியில் 10000 குளங்கள் புனரமைக்கப்புகின்ற வேளையில் கிழக்கில் இத்திட்டத்திற்கு என்ன நடைபெற்றுள்ளது?

 வேளாண்மை விளைவதற்கு அத்தியாவசியமாக காணப்படும் நீர்ப்பசனதிட்டங்களை எடுத்துக்கொண்டால் 1970௧980 களில் பல கோடிகணக்கான செலவில் உருவாக்கப்பட்ட "மாதுறு ஓயா'' திட்டம் தமிழ் விசாயிகள் வாழும் பிரதேசங்களை அண்டி அமைக்கப்படவில்லை. இதனால் தமிழ் விவசாயக்குடும்பங்கள் நிர்க்கதியாகினர். அதுமாத்திரமல்ல இன்னும்பல குளங்கள் சரியான முறையில் புனரமைக்கப்படவில்லை. நாடளாவியரீதியில் 10000 குளங்கள் புனரமைக்கப்புகின்ற வேளையில் கிழக்கில் இத்திட்டத்திற்கு என்ன நடைபெற்றுள்ளது?

 கிரான் கோரளைப்பற்று தெற்கு பிரதேசத்தில் நான்கு ஆறுகள் வாழைச்சேனையின் வாவியூடாக கடலில் சங்கமிக்கின்றன. இதனால் வெள்ளப்பெருக்கு அனர்த்தம் அவ்வப்போது ஏற்படுகின்றது. இங்கு அணைக்கட்டு உருவாக்கப்பட்டு அது முறையாக திசைதிருப்பப்பட்டால் இந்நீரைக்கூட சரியான முறையில் சேமித்து வேளாண்மை போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

 விவசாயிகளுக்கான நன்னீர், நீர்வள விடயங்கள் இவ்வாறு முறையற்ற பராமரிப்பால் சீரழிந்து போய்க்கொண்டிருக்கையில் அறுவடை நெல் அரிசியாக்கப்பட்டு அது சேமிக்கப்படக்கூடிய நெற்களஞ்சியசாலைகள்  பல இன்னும் பூரணமாக இயங்க வைக்கப்படவில்லை.

புலிகளின் காலத்தில் ஆயித்தியமலை பிரதேசத்தில் நெற்களஞ்சியசாலையும், அரிசியாலையும் காணப்பட்டன இன்று அவைகூட தூர்ந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளன. வந்தாறுமூலையில் காலஞ்சென்ற அமைச்சர் தேவநாயகம் அவர்களின் காலத்தில் நெற்களஞ்சியசாலை மற்றும் அரிசியாலை என்பன நிறுவப்பட்டன. பின்னர் யுத்தகாலத்தில் அந்த கட்டிடங்கள் அழிக்கப்பட்டன. இன்றைய சூழ்நிலையை எடுத்துக்கொண்டால் ஒரு சில தமிழர்கள்தான் அரிசியாலயை நடத்துகின்றனர். ஏனையோர் வேறு தொழில்களுக்கு மாறியுள்ளனர். யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகளாகும் இன்றைய காலகட்டத்தில் பொருளாதார மற்றும் உணவின் தன்னிறைவைக்காண  அனைவரும் பாடுபடும் வேளையில் அரிசி உற்பத்தியில் முன்னிலைமை வகித்த கிழக்கு மாகாணமும் அதன் தமிழ் விவசாயிகளும் சரியான முறையில் பராமரிக்கப்பட்டாலே முழு நாடும் அரிசித்தன்னிறைவை அடையமுடியும்.

 அவ்வாறு இல்லாவிடின் அதிகாரிகள் தொடர்ந்தும் அசமந்தப்போக்கை கடைப்பிடித்தால் கிழக்கின் விவசாயிகள் குறிப்பாக தமிழ் விவசாய குடும்பங்கள் தொடர்ந்தும் வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுவது இயலாத காரியமாகலாம். நாட்டின் முதுகெலும்பாக உழைக்கும் இவ் விவசாயிகளை சரியானமுறையில் கவனிப்பது இன்றியமையாத ஒன்றாகும்.

கிழக்குவாழ் தமிழ் விவசாயிகள் தொடர்ந்தும் தமது விதை நிலங்களில் விவசாயத்தில் ஈடுபடுவதா? இல்லை அவர்கள் மனமுடைந்து எதிர்காலத்தை இழப்பதா? இவ்வினாவிற்கு விடை காண்பது இன்றைய காலகட்டத்தில் ஓர் முக்கிய விடயமாகும்.

 ஜனாதிபதி அவர்கள் இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி நடவடிக்கை எடுப்பதன் மூலம் குறிப்பாக கிழக்கில், பொதுவாக முழுநாட்டின் அரிசித்தன்னிறைவை   ஈட்டலாம் என்றும்,

பட்டிருப்பு தொகுதி இலங்கை சுதந்திரக்கட்சி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் மட்டக்களப்பு தொகுதி சுதந்திரக்கட்சி அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளருமாகிய  அருண் தம்பிமுத்து ஆகியோர் கூட்டாக இணைந்து இவ் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .