-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் சுகாதார அமைச்சர் வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு கல்முனை- மட்டக்களப்பு வீதியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் வாகனம் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த இடத்தில் விசாரணை மேற்கொண்டு சாரதியை கைது செய்யமுற்பட்டபோது ஏற்பட்ட ஆள்மாறாட்டம் காரணமாக குறித்த வாகனத்தில் பயணம் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது 24ஆம் திகதி விளக்கமறியிலில் வைக்க உத்தரவிட்டதுடன், அடையாள அணிவகுப்புக்கும் உத்தவிட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பி.ரி.நஸீர் தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பில் அமைச்சரின் வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.