2025 மே 03, சனிக்கிழமை

எனக்கு தொடர்ந்து அரசியலில் இருக்கும் எண்ணம் கிடையாது: முரளிதரன்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

தனக்கு தொடர்ந்து அரசியலில் இருக்கும் எண்ணம் கிடையாதென மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறுகிய காலத்தினுள் பல அபிவிருத்திகளை செய்துவிட்டு தான் அரசியலிலிருந்து விலகுவதற்கு உள்ளதாகக் கூறிய பிரதியமைச்சர்,  இவ்வாறு விலகுவதற்கிடையில் தன்னைச் சிறந்த முறையில் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

தனது பிரதேசத்தையம்; மாவட்டத்தையும் கட்டியெழுப்பவதற்கு தான் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

களுவாஞ்சிக்குடி இளைஞர் முன்னேற்றக் கழகத்தின் 32ஆவது வருடாந்த விளையாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (23) களுவாஞ்சிக்குடியில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

'உலகில் பொதுவானவையாக விளையாட்டும் இசைத்துறையும் காணப்படுகின்றன. விளையாட்டின் நோக்கமானது சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதுடன்,  இளைஞர், யுவதிகளின் ஆளுமை மற்றும் திறமைகளை வளர்ப்பதாகும்.

5 கண்டங்களை இணைப்பதற்காக ஒலிம்பிக் கொடியில் 5 வர்ணங்களைக் கொண்ட வளையங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒலிம்பிக் விளையாட்டு கி.பி 776ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

அப்போதைய காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டுக்கள் தற்போது நவீன மயப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாகத்தான் தேசிய மட்டம், மாகாண மட்டம், மாவட்ட மட்டம், பிராந்திய மட்டம், கிராம மட்டம் என பல்வேறுபட்ட பிரிவுகளில் விளையாட்டுக்களை நடத்தப்படுகின்றன. விளையாட்டுக்களில் மரதன் ஓட்டம் மிகவும் பிரதான இடம் வகிக்கின்றது.

களுவாஞ்சிக்குடியைப்; பொறுத்தவரையில் சிறந்த கல்விமான்களைத் தந்த இடமாகக் காணப்படுகின்றது. அந்த வகையில், களுவாஞ்சிக்குடியிலுள்ள கல்விமான்களுடன் இணைந்து நான் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறுபட்ட அபிவிருத்திகள் பற்றி கலந்தாலோசித்து வருகிறேன்.

அதற்காக வேண்டித்தான் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே தனித் தமிழ் தொகுதியாகக் காணப்படுகின்ற பட்டிருப்பு தொகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டும் என பாடுபட்டு வருகிறேன். மட்டக்களப்பு மாவட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்த பட்டிருப்பு தொகுதி மக்களிடத்தில்; உள்ளது. இதனை இப்பகுதி மக்கள் யாரும் மறந்திடக்கூடாது. அதற்காகத்தான் இந்த தொகுதியிலே நான் அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்தும் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்ளை முன்னெடுத்து வருகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே அமைந்துள்ள பட்டிருப்பு தொகுதியை எனது தலைமையிலும் மட்டக்களப்பு தொகுதியை அமைச்சர் ஹிஸ்புல்லாவின் தலைமையிலும் கல்குடா தொகுதியை  பஸீர் சேகுதாவுதின் தலைமையிலும் அபிவிருத்தி செய்து வருகின்றோம்.
இந்த நிலையில், தமிழ் மக்களின் ஒற்றுமை, பலம் இருந்தால் எதிர்காலத்தில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்கலாம்;.

இந்த களுவாஞ்சிக்குடி இளைஞர் முன்னேற்ற விளையாட்டுக் கழகத்தின் அபிவிருத்திக்கு உடனடியாக ஒரு இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்கிறேன். அதுபோல் இந்த விளையாட்டுக் கழகத்திற்கு ஒரு மேடை அமைத்தும் தருவதற்கு முயற்சி எடுப்பேன் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன். மட்டக்களப்பு மாவட்ட அபவிருத்திக்கென மேலதிகமாக 168 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி பிரதேசம் தற்போது பிரதேச சபையாக இருந்து வருகின்றது. இதனை நகர சபையாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் காரணமாகததான் களுவாஞ்சிக்குடி நகரை அழகுபடுத்துவதற்கு 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இது போன்று பல்வேறுபட்ட அபிவிருத்தகளை மென்மேலும் மேற்கொள்வதற்கு தமிழ் மக்களாகிய நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் சிறந்த முறையில் செயற்பட வேண்டும்.

தற்போது 380 மில்லியன் ரூபா உள்ளது மாவட்டத்தின் பல அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு. வெள்ள அனர்த்த பாதுகாப்புக்காக 1100 மில்லியன் ரூபா உள்ளது. கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்திற்கென 1068 மில்லியன் ரூபா உள்ளது. மேலும் பாடசாலை, வீதிகள் போன்ற புனரமைப்பக்கென 1668 மில்லியன் ரூபா நிதி உள்ளது. இவற்றுள் 178 மில்லியன் ரூபாய் நிதி பொருளாதார அமைச்சிலிருந்து வருகின்றது.
இவ்வாறு நிதிகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவந்து கல்வி, சுகாதாரம், விளையாட்டு, குடிநீர் விவசாயம், மற்றும் ஏனைய வாழ்வாதார செயற்பாடுகளுக்கும் செலவு செய்து அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இதனால் எமது மாவட்டம் பூரணத்துவம் பெற்ற மாவட்டமாக விரைவில் மாற்றமடையும்.

இவற்றின் வெளிப்பாடாக மண்முனைத்துறைப் பாலம் எதிர்வரும் சித்திரை மாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இவையனைத்திற்கும் மட்டக்ளப்பு மாட்டத்திலே தனித்தமிழ் தொகுதியாகக் காணப்படுகின்ற பட்டிருப்புத்தொகுதி வாழ் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் கட்சியில் குறைந்தது மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை எமது மக்கள் அனுப்பினார்கள் என்றால் மேலும் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும்.

நான் ஒரு பிரத்தியமைச்சர் மாத்திரமல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவருமாக இருக்கின்றேன். ஆகையில் இவைகளை வைத்துக் கொண்டு அதிகளவான அபிவிருத்திகளை மேற்கொள்ளமுடியும்.

கடந்த காலங்களில் இருந்து செயற்பட்ட இராஜன செல்வநாயகம், இராசமாணிக்கம். தேவநாயகம் போன்ற தமிழ் அரசியல் அமைச்சர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்து இப்பகுதியில் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்;கினார்கள். அவர்களுடைய காலங்களில் சிறந்த வளர்சியும் காணப்பட்டன.

அவை இடைப்பட்ட காலங்களில் தடைப்பட்டுக் கிடந்தன தற்போது அந்த வளர்ச்சியினை மீண்டும் கொண்டு வருகின்றோம்.

இவைகளுக்கு அரசியல், மற்றும் அதிகாரங்களைக் கொண்டுதான் அபிவிருத்திகளை மேலாங்கிச் செல்லமுடியும். இலங்கையிலே சிறந்த எடுத்துக்காட்டாக அண்மையில் இம்மாவட்டத்திலுள்ள பட்டதாரிகள் அனைவருக்கும் நியமனங்களை வழங்கி அனைவரும் நிரந்தர உத்தியோகஸ்தர்களாக்கியுள்ளோம். இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டான விடயமாகும். இவ்வாறு பல நன்மைகளை காலப்போக்கில் கொண்டு வரலாம். இவற்றுக்கு எதிர்காலத்தில் அவற்றுக்குரிய சிறந்த நபர்களைத் தெரிவு செய்ய வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X