Suganthini Ratnam / 2015 ஜனவரி 25 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
நீதி, நியாயம், சத்தியம் என்பவற்றின் அடிப்படையில் சமூகங்கள் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும். பல்வேறு சமூகங்கள் வாழ்கின்ற நாட்டிலோ, பிரதேசத்திலோ எல்லாவற்றையும் ஒரு சமூகமே பெற்றுக்கொள்ள நினைப்பதும் அனுபவிக்க நினைப்பதும் நீதியும் நியாயமும் ஆகாது. அங்கு விட்டுக்கொடுப்பதும் வேண்டிக்கொள்வதும் சத்தியத்தின் அடிப்படையில் அமைதல் வேண்டும். ஒரு சமூகத்துக்கு இருக்கின்ற விருப்பும் அபிலாஷைகளும் மற்றுமொரு சமூகத்துக்கும்; இருக்கும் என்பதை ஒவ்வொரு சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரம், ஒவ்வொரு சமூகத்தினராலும் ஜனநாயக விழுமியங்கள் மதிக்கப்படவும் ஏற்றுக்கொள்ளப்படவும் வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் ஞாயிற்றுக்கிழமை (25) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸை விட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக மாகாணசபை உறுப்பினர்களை கொண்டிருந்தபோதிலும், சிறுபான்மை இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி ஒன்றாக செயற்படவேண்டும் என்ற உயரிய நோக்குடன் கிழக்கு மாகாண முதலமைச்சு பதவியை சகோதர இனமான முஸ்லிம்; சமூகத்தினருக்காக விட்டுக்கொடுக்கவும் முஸ்லிம்; காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸிடம் இணக்கம் தெரிவித்திருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அன்றைய அரசை கடுமையாக விமர்சித்து வந்திருந்த முஸ்லிம் காங்கிரஸும் நிச்சயமாக இணைந்து கிழக்கு மாகாணசபையை ஆளும் என்றே பலரும் எதிர்பார்த்திருந்தனர். தமிழர் சமூகமும் அதையே விரும்பி இருந்தது.
ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்கத்தை புறந்தள்ளி தங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அன்றைய அரசுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை அமைத்துக்கொண்டது. அந்த ஆட்சியில் இஸ்லாமியர் ஒருவருக்கு முதலமைச்சுப் பதவியையும் கொடுத்து ஏனைய மாகாண அமைச்சுக்களையும் தங்களிடையே பகிர்ந்துகொண்டு எந்த ஒரு தமிழ் மகனுக்கும் எந்த ஓர் உயர் பதவியையும்; கொடுக்காமலும், கொடுக்கக்கூட நினைக்காமலும் முஸ்லிம்; காங்கிரஸ் நடந்துகொண்டமையானது தமிழ் மக்களிடையே பெரும் வேதனையையும் ஏமாற்றத்தையும் உருவாக்கியிருந்ததை மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் அறியும்.
அதேவேளை, அன்றைய மத்திய அரசிலும் கூட அமைச்சுப் பொறுப்புக்களையும் பிரதி அமைச்சுப் பொறுப்புக்களையும் அவர்கள் தங்களுக்குள் பெற்றுக்கொண்டு தங்கள் சமூகத்துக்கு சகல விதமான சலுகைகளையும் பெற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கின்ற நிலையில், தங்களோடு காலம் காலமாக வாழ்ந்துவருகின்ற சிறுபான்மை இனமான தமிழர்களை முஸ்லிம்; காங்கிரஸ் மறந்துபோனமையானது மிகவும் வேதனைக்குரியதொன்றாகும்.
இன்றைய புதிய மத்திய அரசிலும் கூட முஸ்லிம் காங்கிரஸும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்களும் அமைச்சுப் பொறுப்புக்களையும் பிரதி அமைச்சுப் பொறுப்புக்களையும் எடுத்துக்கொண்டிருக்கின்றதும் அரசியல் காய் நகர்த்தல்களை தங்கள் சமூகத்துக்காக மேற்கொள்கின்றதும்; வரவேற்கத்தக்கதே. அதேநேரம்; மற்றைய சமூகத்தவர்களின் உரிமைகள், சலுகைகள் என்பவற்றை மதித்துப் பேணுவதும் அவர்களது தார்மீகப் பொறுப்பாகும் என மட்டக்களப்பு மக்கள் கருதுகின்றார்கள்.
கிழக்கு மாகாணத்தில் 40 சதவீதமானவர்கள் தமிழர்களும் 37 சதவீதமானவர்கள் இஸ்லாமியர்களும் 23 சதவீதத்தினர் சிங்களவர்களும் வாழ்கின்றனர். அது மட்டுமல்லாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 11 மாகாணசபை உறுப்பினர்களும் முஸ்லிம்; காங்கிரஸ் சார்பில் 7 மாகாணசபை உறுப்பினர்களும் உள்ளனர். இந்த நிலையிலும் கூட, கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சுப்பதவி தங்களுக்கே தரப்படல்வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ்; கேட்பது நியாயம் தானா? என தமிழ் மக்களிடையே பெரும் கேள்வி எழுந்து நிற்கிறது.
ஒன்றாக வாழவேண்டியவர்களாகிய நாம் நியாயத்தின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும் புரிந்துகொண்டும் வாழவேண்டியது காலத்தின் தேவையாகும். நிலமையை சீர்தூக்கிப் பார்க்கையில் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுவதே முற்றிலும் நியாயமானது என இவ்வறிக்கையூடாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago