2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெறுமனே சமாதானம் என்றால் என்ன?: அரியநேத்திரன்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 26 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

'வெறுமனே சமாதானம் என்றால் என்ன? ஒரு நாட்டின் விடுதலைக்காக போராடிய இனத்தின் போராட்டத்தை அடக்கிவிட்டால் அது சமாதானமா? அல்லது அந்த விடுதலைக்காக போராடிய இனத்துக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டால் சமாதானமா?  ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அந்தப் போராட்டத்தை அடக்கிவிட்டு சமாதானம் என்றார்கள்'  இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின்; திருப்பழுகாமம் இந்து கலாமன்றத்தின் 36ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இந்து கலாமன்ற அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழாவும் பரிசளிப்பு  விழாவும்   திருப்பழுகாமம் ஸ்ரீதிரௌபதை அம்மன் கோவில்  முன்றலில் ஞாயிற்றுக்கிழமை (25)  நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'எமது இனத்தின் நிலம்,  கலை பாரம்பரியங்களை, பண்பாடுகளை பாதுகாக்கவேண்டும் என்றும்; இந்த மண்ணுக்காகவும் 65 வருடமாக நாம் பல வழிகளில் போராடிவருகின்ற ஓர் இனமாக  இருந்துவருகின்றோம். அஹிம்சை வழியாக போராடி, ஆயுத ரீதியாக போராடி தற்போது இராஜதந்திர வழியாக எமது மண்ணுக்காகவும் கலை பாரம்பரியங்களுக்காகவும் தமிழனின் தனித்துவத்துக்காகவும்  போராடிவருகின்றோம்.

மக்களுக்கு அறம் சார்ந்த கல்வியாக வளர்க்கப்பட்டு ஆன்மிக சார்ந்த கல்வி போதிக்கப்பட்டாலும், வரலாறு சார்ந்த அரசியல் விடயங்களையும் மாணவர்களுக்கு  நாம் போதிக்கவேண்டும். ஏனென்றால், அப்போதே எமது நிலம் மற்றும் கலை, கலாசாரங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு பேணப்பட்டு வரும்.

பல்வேறுபட்ட அரசியல் மாற்றங்களுக்கு பிற்பாடு நாம் இந்த விழாக்களில் கலந்துகொண்டுள்ளோம். கடந்த வருடம் பொங்கல் விழாவில் அதிதிகளை விட, புலானாய்வாளர்களே அதிகமாக காணப்பட்டார்கள். ஆனால், இம்முறை அந்த நிலை மாறியுள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி இந்த நாட்டில் சமாதானத்தை கொண்டுவந்ததாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கூறிய சமாதானம், கடந்த  ஐந்து வருடங்களும்  இருந்ததா என்பதை நாம் பார்க்கவேண்டும்.

வெறுமனே சமாதானம் என்றால் என்ன? ஒரு நாட்டின் விடுதலைக்காக போராடிய இனம். அந்த போராட்டத்தை அடக்கிவிட்டால் அது சமாதானமா? அல்லது அந்த விடுதலைக்காக போராடிய இனத்துக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டால் சமாதானமா?   ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அந்த போராட்டத்தை அடக்கிவிட்டு சமாதானம் என்றார்கள். அந்த சமாதானத்துக்கு வரைவிலக்கணமாக பல்வேறுபட்ட நிகழ்வுகளை முன்வைத்தது. வட, கிழக்கில் பாலம், வீதிகள,; யாழ்தேவி மற்றும் பல அபிவிருத்திகளை  சமாதானம் என்றது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சமாதானம் என்பது தமிழ் இனம் 65 வருடங்களாக அபிவிருத்திக்காக போராடிய ஓர் இனம். அது அனைத்தும் தற்போது கிடைத்துவிட்டது. இதுதான் சமாதானம் என்ற மாயையை அவர்கள் தோற்றுவித்திருக்கின்றார்கள். ஆனால், அதுவல்ல சமாதானம். தென்;பகுதியிலே வாழ்கின்ற சிங்கள மக்கள் எந்த உரிமையுடன் எந்த சுதந்திரத்துடன் எந்த அபிலாஷையுடன் வாழ்கின்றனரோ, அதனை எமக்கும் தரவேண்டும் என்பதை நாங்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X