2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’குப்பை இறக்குமதி உண்மைக்கு புறம்பானது’

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 03 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு பதார்த்தத்தையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்காதென காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

சீனா மற்றும் வேறு சில நாடுகளில் இருந்து  இரசாயன நச்சுப் பதார்த்தங்களையும் குப்பைகளையும் அரசாங்கம் இறக்குமதி செய்வதாக சிலர் பிரசாரம் செய்வது உண்மைக்குப் புறம்பானதென்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு, சந்திவெளி பிரதேசத்தில் சேதனப் பசளை தயாரிக்கும் 5 நிலையங்களை ஆரம்பிக்கும் நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் என். விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் சந்திரசேன மேலும் தெரிவிக்கையில், “நாட்டைக் கட்டியெழுப்பும்  பெரும் முயற்சியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளார்.

“சேதனப்பசளை பயன்பாட்டின் மூலம் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்தது, பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காகும்.

“காரணம், எமது நாட்டில் சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் ஆகிய தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு, இன்னும் அடையாளம் காணப்படாத  பலர் சமூகத்தில் உள்ளனர் என சுகாதார அமைச்சின்  புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

“குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாண மக்கள் இன்னும் சேதனப்பசளை பாவனைக்கு உட்படவில்லை. ஆனால், பல்வேறு விமரிசனங்களை செய்கின்றனர்.

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள விவசாயிகள் பல காலங்களுக்கு முன்னரே சேதனப்பசளை பயன்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் வடக்கு, கிழக்கு மாகாண மக்களை சேதனப்பசளை பயன்பாட்டுக்கு உட்படுத்துவது சுலபமாகவுள்ளது. இங்கு தயாரிக்கப்பட்டுள்ள சேதனப்பசளை குவியலைப் பார்க்கும்போது அந்த விடயம் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X