2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பூர்விக நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, கல்குடா தொகுதியிலுள்ள உள் ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயத்தில் தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, வாழைச்சேனையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று,  இன்று (24) நடைபெற்றது.

வாழைச்சேனை பொது அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வாழைச்சேனை, கைலாயப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி, பிரதேச செயலகத்தில் முடிவடைந்தது.

அங்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை, உதவித் திட்டமிடல் பணிப்பாளரிடம் பேரணியில் கலந்துகொண்டோர் கையளித்தனர்.

“கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபை மூன்றாகப் பிரிக்கப்பட்டு கோளனைப்பற்று செயலகப் பிரிவிலுள்ள 12 கிராம சேவகர் பிரிவுகளை  உள்ளடக்கி,கோறளைப்பற்று பிரதேச சபை அமைக்கப்பட வேண்டும்.

“கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராமங்களை உள்ளடக்கி, கோறளைப்பற்று தெற்கு பிரதேசசபை அமைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே கோறளைப்பற்று ஓட்டமாவடி பிரதேச சபையினுள் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ள வடமுனை, கல்லிச்சை, ஊத்துச்சேனை, வாகனேரி புணாணை ஆகிய கிராமங்கள், புதிதாக அமைக்கப்படும் கோறளைப்பற்று தெற்கு பிரதேசசபையுடன் சேர்க்கப்பட வேண்டும்.

“அதேபோன்று, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிராமங்களை மாத்திரம் உள்ளடக்கி புதிதாக பிரதேச சபை அமைப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த எமது கிராமங்களில் எல்லையில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படக் கூடாது”, என்ற கோரிக்கைகளை முன்வைத்து, இந்த  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X