2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தேசிய கட்சி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்: மனோ

Super User   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தில் பெற்றுள்ள வெற்றியின் மூலம் நாம் ஒரு தேசிய கட்சி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின்  தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த மாகாண சபை தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"கண்டி மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்ட நமது ஜனநாயக  மக்கள் முன்னணி வேட்பாளர் வேலு குமார் 18,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் பிரசார காலகட்டத்தின் போதும் தேர்தல் அன்றும்  நிலவிய அசாதாரண அரசியல் வன்முறை சூழலின் மத்தியில் ஒரு எதிர்கட்சியான எமக்கு கண்டியில் கிடைத்துள்ள வெற்றி ஒரு பெரும் வெற்றியாகும்.

படித்த பட்டதாரி இளைஞரான நமது மத்திய மாகாண சபையின் புதிய உறுப்பினர்  வேலு குமார் நமது கட்சியின் கொள்கைவழி பயணத்தை  தூய சிந்தனையுடன் இனி வருங்காலத்தில் கண்டி மாவட்டத்தில் முன்னெடுப்பார். நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து மாற்றுக்கட்சி நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை  தெரிவித்துகொள்கின்றேன்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட பதட்ட  நிலைமைகள்    காரணமாக  கண்டி மாவட்ட முடிவுகள் நேற்று இரவு தாமதமாகவே வெளியிடப்பட்டன. தலைநகர தமிழ் மக்களின் தலைமை கட்சியாக மேல் மாகாண சபையில் பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ள நாம் மத்திய  மாகண சபையிலும் கண்டி மாவட்ட பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளோம்.

கண்டி மாவட்டத்தில் எமது வெற்றி, ஜனநாயக மக்கள் முன்னணி ஒரு தேசிய கட்சி என்ற மகத்தான செய்தியை மீண்டும் நிரூபித்துள்ளது. எனினும் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ராஜ்குமார் மற்றும் சந்திரகுமார் ஆகிய இருவரும் வெற்றி பெறவில்லை.

நுவரெலிய மாவட்டத்தில் எமது கூட்டணியின் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் செல்வாக்கு சரிவு, தேர்தல் பிரசார காலகட்டத்தில் நிலவிய வன்முறை, அரசு வளங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை மற்றும் தேர்தல் பிரசார காலகட்டத்திலும் தேர்தல் அன்றும் தோட்ட தொழிலாளர் மத்தியில் மதுபானம் அரசியல் வாக்களிப்பின் ஒரு கருவியாக மிகப் பெரியளவில்  பயன்படுத்தப்பட்டமை ஆகிய காரணங்கள் எங்களுக்கு எதிராக அமைந்து இருந்தன.     

மலையகத்தின் இதயமான நுவரெலியா மாவட்டத்தை மீட்டு எடுப்பதில் இளைஞர் சமூகத்தின் துணையுடன் விழிப்புணர்வுகான ஒரு அறிவொளி  இயக்கத்தை முன்னெடுக்க நாம் உறுதி பூண்டுள்ளோம்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .