2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

கூட்டொப்பந்த பேச்சு வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பம்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 க.ஆ.கோகிலவாணி

இழுபறி நிலையிலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான கூட்டொப்பந்தப் பேச்சுவார்த்தை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவித்த  முதலாளிமார் சம்மேளனம், உற்பத்தி அடிப்படையிலான கூட்டொப்பந்தத்துக்கும் வலியுறுத்தியுள்ளது.

பெருந்தோட்டத்துறை எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் கூட்டொப்பந்தப் பேச்சு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, முதலாளிமார் சம்மேளனத்தின் தலைமையில் கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள ரேணுகா ஹோட்டலில், செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, முதலாளிமார் சம்மேளனத்தின் ஆலோசகர் எஸ்.ஸ்ரீகுமார் மேற்படி விடயத்தை வலியுறுத்தினார்.

இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலாளிமார் சம்மேளனத்தில் தலைவர் ரொஷான் ராஜதுரை தொடர்ந்து கூறியதாவது,
'அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்கவும் தொழிலாளர்களின் அபிலாஷைகளை கருத்திற் கொண்டும், தேயிலைச் சபையினூடாக அரச வங்கிகள் வழங்கிய 800 மில்லியன் ரூபாய் கடனைக்கொண்டு பெருந்தோட்டக் கம்பனிகள், தொழிலாளர்களுக்கு ஜுன், ஜூலை மாதங்களில் 2,500 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவை வழங்கியுள்ளன.

இந்த இடைக்காலக் கொடுப்பனவானது, முதலாளிமார் சம்மேளனத்துக்கும் அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில், 2016 ஓகஸ்ட் மாத சம்பளக் கொடுப்பனவுக்கு முன்னர், உற்பத்தி அடிப்படையிலான கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்படும்' என்ற அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது' என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

'உலக சந்தையில் தேயிலை விலையின் வீழ்ச்சி, அசாதாரண காலநிலைகளினால் தேயிலை உற்பத்தியில் ஏற்பட்ட இழப்பு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் களைகொல்லிகளைத்  தடைசெய்தமை போன்ற நிலைமைகளால் தேயிலை, இறப்பர் தொழிற்துறை பாரிய இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் முதலாளிமார் சம்மேளனமானது, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் உற்பத்தி அடிப்படையிலான கூட்டொப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான அவசர தேவையை வலியுறுத்துகின்றது' என அவர் கூறினார்.

'சம்பள விடயத்தில் அவசியத் தேவைப்பாடாக உள்ள திருத்தத்தைத் தொடர்ந்து தள்ளி வைப்பதன்மூலம் தேயிலை, இறப்பர் தொழிற்துறை ஆபத்தான சூழ்நிலையில் இருக்கின்றன.

150 வருடகால பழைமையான வருகை சார்ந்த ஊதிய முறைமை, தொழிலாளர்களுக்கு வினைத்திறனை அதிகரிப்பதற்கான போதியளவு ஊக்கத்தை கொடுக்காத நிலையில், செலவையும் அதிகரித்துள்ளது. எனவே, சிறந்த ஊதிய வெளிப்பாடானது பரஸ்பர நன்மை மற்றும் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதோடு, உற்பத்தித் திறனை அதிகரிக்கின்றது. இதேவேளை, தொழிலாளர்களின் வருமானத்தையும் அதிகரிக்கின்றது' என அவர் மேலும் கூறினார்.

'களைகொல்லிகள் தொடர்பான விடயத்தில் அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்' என்று கோரிய அவர்,  பொருத்தமான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் படலிhழளயவந போன்ற களைகொல்லிகளை தன்னிச்சையாகத் தடைசெய்தமையினால், பெருந்தோட்டங்களில் களைநாசினிகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளதுடன் தேயிலைத் தோட்டங்கள் காடுகளாகவும் மாறி வருகின்றன' என்றார்.

தேயிலைத் தோட்டங்கள் காடுகளாக மாறியுள்ளதால், குளவிகளின் தாக்குதல், பாம்புக்த கடிக்கு தொழிலாளர்கள் உள்ளாகி வருவதாகவும்  களைகளைக் கட்டுப்படுத்த பெருந்தோட்டக் கம்பனிகள் பாரியளவு தொகையை செலவிடவேண்டி ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினர்.
இழுபறி நிலையிலுள்ள கூட்டொப்பந்த பேச்சுவார்த்தையை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கம் முன்வர வேண்டுமெனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .