2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

கொஹாகொட குப்பை மேடு விவகாரம்: ‘40 நாட்களுக்குள் தீர்வு’

Kogilavani   / 2017 மே 07 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, கட்டுகஸ்தோட்டை – கொஹாகொடை குப்பை மேட்டினால், எந்ததொரு பாதிப்பும் இல்லை என்று, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

மேலும், குறித்த குப்பை மேட்டில் மேலும் குப்பைகளை குவிக்காமல் இருப்பதற்கும், அதற்கான மாற்று வழியை மேற்கொள்வது தொடர்பாகவும், இன்னும் நாற்பது நாட்களுக்குள் முடிவொன்று எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குறித்த குப்பை மேட்டை பார்வையிடுவதற்காக, வெள்ளிக்கிழமை (5) அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“கொழும்பில் நிலவும் குப்பை பிரச்சினையை விடவும் கண்டியில் காணப்படும் இந்த குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண்பது இலகுவாக உள்ளது. இதற்கு காரணம் இங்குள்ள நிறுவனங்கள் அனைத்தும் ஒற்றுமையாக உள்ளன. குறித்த குப்பை மேட்டினால் எந்ததொரு பாதிப்பும் இல்லையென, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எனினும், இந்த குப்பை மேட்டில் ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர். இம்மக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை” என்றார்.

மேலும், குறித்த குப்பை மேட்டுப் பகுதியில் மேலும் குப்பைகளை குவிக்காமல் இருப்பதற்கு, அதற்கான மாற்று வழியை மேற்கொள்வது தொடர்பாக இன்னும் நாற்பது தினங்களுக்குள் முடிவொன்று எடுக்கப்படும். குறித்த செயற்பாட்டை நடைமுறைப்படுத்த மாகாண சபை, மாநகர சபை, உள்ளூராட்சி அமைப்புகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுடன் தொடர்புடைய சுற்றாடல் அமைப்புகள் ஆகியன இணக்கத்துக்கு வந்துள்ளன.

இதனால், இதனடிப்படையிலான இடம் தெரிவுசெய்யப்பட்டு, அப்பகுதியில் உள்ள குப்பைகளைத் தரம் பிரித்து, குறிப்பிட்ட பாகங்களை மீள்சுழற்சி செய்வதுடன், உக்கக் கூடியவற்றைக் கொண்டு கொம்போஸ்ட் பசளை தயாரிக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும்.

அத்துடன், மத்திய அரசாங்கமும் குப்பைகளை எடுத்துச் செல்லும் ட்ரெக்டர்களுக்குப் பதிலாக கொப்பெக்டர் இயந்திரங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்மூலம் உடனுக்குடன் குப்பைகள் சிதைக்கப்பட்டே வாகனத்தில் ஏற்றப்படும். இதற்காக கொம்பெக்ட் இயந்திரங்கள் 100 இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி தலதாமாளிகையின் புனிதத்தை பாதுகாக்கும் வகையில், அதன் திண்மக் கழவுகளுக்காக தனி அலகு ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளது. குறித்த வேலைத்திட்டம் பசுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .