2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தமிழ் மொழியில் பிரிவனாக் கல்வியை தொடருவதற்கு நடவடிக்கை

Sudharshini   / 2016 மே 31 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்  

தமிழ் மொழியில், பிரிவனாக் கல்வியை தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியுள்ளதாக கண்டி, அஸ்கிரிய பீடத்தின் பீடாதிபதி உடவத்தே நந்தநாயக்க தேரர் கூறினார்.

'தமிழ்மொழி மூலம் பிரிவனாக் கல்வியை கற்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பத்திலேயே, நாட்டில் இன ஒற்றுமை அதிகரிக்கும். அதனால், இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' எனவும் அவர் கூறினார்.   

கினிகத்தேனை, பதுபொல ஸ்ரீ சுபத்தாராமய மகா விகாரையில் நிர்மாணிக்கப்படவுள்ள  புதிய பிரிவனா கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். அங்கு மேலும் கூறிய அவர், 'இலங்கையில்; தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் ஆரம்ப காலம்தொட்டே ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம்.  அதேபோல், எமது சிறுவர்களையும் ஒற்றுமையாக வாழ்வதற்கு பழக்க வேண்டும். இதன்போதே நாட்டில் சமாதானத்துடனும் நிம்மதியாகவும் வாழ முடியும். அதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும்' என்றார்.

'பௌத்த மதத்தின் தத்துவங்களை ஏனைய மொழி சார்ந்த மதத்தினர் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால்,  தமிழ்மொழியில் பிரிவனா கல்வியை தொடர வேண்டும். அதனை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அவை நடைமுறைப்படுத்தப்படுமானால் இந்த நாட்டில் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை குறைக்க முடியும்' என்றும் அவர் கூறினார். இதன்போது உரையாற்றிய இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்,  'தற்போது மதங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்;  காரணமாக  நாட்டில் சுகவாழ்வு காணப்படுகின்றது. அதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கமும் காரணமாக உள்ளது.

தற்போதைய ஜனாபதி மைத்திரிபால சிறிசேன, அனைத்து மதங்களுக்கும் முன்னுரிமை வழங்கியுள்ளார். அந்த மதங்களின் விவகாரங்களுக்கு அமைச்சுக்களையும் அமைச்சர்களையும் நியமித்துள்ளார். அதனால், மதங்களுக்கு இடையில் பிரச்சினைகள் இன்றி வாழக் கூடிய நிலை தோன்றியுள்ளது. இதனை வழுப்பெறச் செய்ய அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்' என கூறினார்.

இந்நிகழ்வில், கண்டி, நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த பிரதான விகாரைகளின் விகாராதிபதிகள், அம்பகமுவ பிரதேச செயலாளர் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .