2025 ஜூலை 19, சனிக்கிழமை

நால்வரின் சடலங்கள் மீட்பு; ஒருவரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன

R.Maheshwary   / 2022 ஜனவரி 30 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா, ராமு தனராஜா

அட்டாம்பிட்டிய- கெரண்டியல பகுதியிலுள்ள உமா ஓயா ஆற்றில் நீராடச் சென்ற நிலையில், காணாமல் போன ஐவருள் நால்வர் சடலங்களாக  மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒருவரைத் தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

 அட்டாம்பிட்டிய தோட்ட முதலாம் பிரிவிலிருந்து ,கெரண்டியல்ல பகுதியில் ஓடும் உமாஓயா ஆற்றில் நீராடச்சென்ற ஐவர் திடீரென ஏற்பட்ட சுழியில் சிக்குண்டு ஆற்றில் மூழ்கி நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் காணாமல் போன நிலையில், நால்வரின் சடலங்கள் நேற்றைய தினமே மீட்கப்பட்டுள்ளன.

நபர் ஒருவரின்  ஓராண்டு நினைவஞ்சலி திதி நிகழ்வில், கடந்த 28ஆம் திகதி கலந்து கொண்டபின் உறவினர்களில் 11 பேர் சம்பவ தினம் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கெரண்டியல்ல, உமாஓயா ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர்.  இவர்கள் அனைவரும் 20 தொடக்கம் 25 வரைக்குட்பட்ட இளைஞர், யுவதிகளாவர்.

ஆற்றில் நீராடிவிட்டு 6 பேர் அக்கரைக்குச் சென்ற வேளையில், இளைஞர்
ஒருவரும் , 4 யுவதிகளும் ஆற்றிலிருந்த கற்பாறையொன்றில் அமர்ந்து
உரையாடிக் கொண்டிருக்கையில், இளைஞர் தவறி ஆற்றில் வீழ்ந்துள்ளார்.

அவரை காப்பாற்றுவதற்காக யுவதிகள் ஒவ்வொருவரும் கைகளைப் பற்றிக்கொண்டு ஆற்றில் இறங்கிய வேளையில், திடீரென ஏற்பட்ட சுழியில் சிக்குண்டு ஆற்றில் மூழ்கி காணாமல் போயிள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அட்டாம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு தகவல்
தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து,தோட்ட
இளைஞர்களுடன் இணைந்து  மீட்பு பணியில் ஈடுபட்ட போது,   நால்வர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் நெலுவ, கின்ரூஸ் தோட்டத்தைச்
சேர்ந்த ஜெயராம் காஞ்சனப்பரியா (வயது21), செல்வகுமார் பரிமளாதேவி
(வயது19), ஹட்டன், திம்புலப்பத்தனயைச் சேர்ந்த அடையப்பன் பவானி சந்திரா
(வயது24), அட்டாம்பிட்டிய, முதலாம் பிரிவைச் சேர்ந்த வனராஜா டேவிட்குமார்
(வயது 23) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ள நெலுவ,கின்ரூஸ் தோட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் சசிப்பிரியா (வயது20) என்ற யுவதியின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை என அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த யுவதியை தேடும் பணிக்கு  தியத்தலாவ இராணுவ முகாமைச் சேர்ந்த சுழியோடும் வீரர்களின் உதவியும் பெறப்பட்டுள்ளது. 

இதேவேளை உயிரிழந்த எஸ்.சசிப்பிரியா, எஸ்.பரிமளாதேவி (திரிஷா) ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X