2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மலையக விவசாய நிலங்களில் 50 சதவீதம் அழிவு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 17 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மேனகா மூக்காண்டி

மலையகத்தில் அழிவுக்குள்ளாகிவரும் விவசாயக் காணிகளைப் பாதுகாப்பதற்குரிய ஐந்தாண்டுத் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே, அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க கூறினார்.

அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும், வாராந்த செய்தியாளர் மாநாடு, நேற்றுப் புதன்கிழமை, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அமைச்சர், மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

'மண் கழுவிச் செல்லல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நிலத்துக்கு ஏற்படும் அழிவானது, இலங்கை எதிர்நோக்கிவரும் பாரியதொரு சுற்றுச்சூழல் பிரச்சினையாகும்.

மத்திய மாகாணத்தில் 50 சதவீதமான விவசாய நிலங்கள், அவ்வாறு அழிவுக்குள்ளாகியுள்ளன. கண்டி, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களே, இவ்வாறு பெருமளவில் அழவுகளைச் சந்தித்துள்ளன.

இதனால், அப்பிரதேசங்களின் சூழல் மற்றும் விவசாயிகளின் நிலைமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, நிலையான காணி முகாமைத்துவத் திட்டத்தன் ஊடாக, இப்பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் 9,740,000 அமெரிக்க டொலர்கள் நிதியுதவி மற்றும் சர்வதேச சூழல் வசதிகள் திட்டத்தின் 1,344,657 அமெரிக்க டொலர்கள் நிதியுதவியினூடாக, மேற்படி மாவட்டங்களில் நிலவும் விவசாயக் காணிகளின் நில அழிவைத் தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இத்திட்டமானது, 2016  முதல் 2020ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டமாக, கண்டி, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .