2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

வேலை நிறுத்தத்தை கைவிடவும்

Kogilavani   / 2016 ஜூன் 13 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மாவட்டத்துக்கு உட்பட்ட அகலவத்தை பிளாண்டேஷன் நிர்வகிக்கும் அனைத்துத் தோட்டங்களிலுமுள்ள தோட்டச் சேவையாளர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு, 2013ஆம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருந்த ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்துக்கான கொடுப்பனவுகள், இன்று செவ்வாய்க்கிழமை (14) வழங்கப்படும். அதனால், வேலை நிறுத்தத்தை கைவிட்டுவிட்டு, தொழிலுக்குச் செல்லுமாறு மேற்படி தோட்டச் சேவையாளர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொழிலுறவு இயக்குநர் எஸ்.ஜோதிக்கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 2ஆம் திகதி முதல், மேற்படி தோட்ட சேவையாளர்களும் தோட்டத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமக்கான கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்கும் வரை, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அகலவத்தை பிளாண்டேஷனின் பொது முகாமையாளர் டி.டி.கிறிஸ்டியுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொழிலுறவு இயக்குநர் ஜோதிக் கண்ணன் தொடர்புகொண்டு கலந்தரையாடியதை அடுத்து, அனைத்துக் கொடுப்பனவுகளையும்; பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

இதன்படி, 2013ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான கொடுப்பனவுகள், காசோலை மூலமாக வங்கியில் வைப்பு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தோட்டத் தொழிலாளர்களுக்கோ சேவையாளர்களுக்கோ தோட்ட நிர்வாகங்களினால் அநீதி விளைவிக்கப்படுவதை, இ.தொ.கா ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. தோட்டச் சேவையாளர்களது விவரங்களைத் திரட்டும்படி மத்துகமை, இங்கிரிய, புசல்லாவை, இரத்தினபுரி பிராந்திய அலுவலக பிரதிநிதிகளை கேட்டுள்ளதாக எஸ்.ஜோதிக்கண்ணன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .