2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

’இரத்தினபுரி தேர்தல் தொகுதியின் சேத விவரங்களை புதனுக்கு முன் சமர்ப்பிக்கவும்’

Editorial   / 2017 ஜூன் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-உமாமகேஸ்வரி

இரத்தினபுரி தேர்தல் தொகுதியில்  சேதமடைந்த வீடுகள், வர்த்தக நிலையங்கள், கிணறுகள் மற்றும் தேவையான பொருட்கள் குறித்த முழுமையான விவ​ரங்களை, எதிர்வரும் 7ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் வங்குமாறு,  கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதிகாரிகளுக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேச செயலகத்தில், நேற்று (03) மாலை,  இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் இயற்கை அனர்த்தம் காரணமாக  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் பொருட்டு, விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ,அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,  பாதிக்கப்பட்ட மக்களின் விவரங்கள், சேதமடைந்த வீடுகள், கிணறுகள், வர்த்தக நிலையங்கள்,வீதிகளின் விவரங்கள். பாடசாலைகள்,பாதிக்கப்பட்ட வாத்தகர்களின் விவரங்கள் மற்றும் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும்  தனித்தனியாக  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வினவப்பட்டபோது, அவர்கள் உரிய தகவல்களை வழங்கவில்லை.

இதையடுத்தே, அமைச்சர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இங்கு அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்,

“முழுமையாக பாதிக்கப்பட்ட வீட்டுக்கு 25 இலட்சம் ரூபாயும் பகுதியளவு  பாதிக்கப்பட்ட வீட்டுக்கு  மதிப்பிட்ட பின்னர்  10 இலட்சம் ரூபாய் வரை நட்ட ஈடாக வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமையலறைப் பொருட்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்படும்” என்றார்

மேலும், வெள்ளத்தினால் அசுத்தமாக்கப்பட்ட கிணறுகள், நீர் நிலைகள் மற்றும் வடிகான்களை துப்பரவு செய்யும் பணியை இன்னும் ஒரு வார காலத்துக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என, இராணுவத்தினருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

இராணுவத்துக்கு உதவியாக மேலதிகமான ஆளணிகளை வழங்கும் பொறுப்பையும் வாகன வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொறுப்பையும் இலங்கை சீனிக்கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைத்ததுடன் தேவையான நீரிறைக்கும் பம்பிகள், இயந்திரங்கள் மற்றும் குளோரின் ஆகிவற்றையும் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுத்தார்.

மேலும், வீடுகளை இழந்து பரிதவிக்கும் மக்களின் தற்காலிக இருப்புக்காக கூடாரங்களும் உடன் பெற்றுத்தரப்படும் என உறுதியளித்த அமைச்சர், நிரந்தர வாழிட தேவைக்காக வீடுகளை முற்றாக இழந்தவர்களுக்கு மீள அமைத்துக் கொடுக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அத்துடன், தொழில்களை இழந்தவர்களுக்கும் தனது அமைச்சினூடாக விமோசனங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  சிறு கைத்தொழில் சிறு வியாபாரம் செய்தவர்களுக்கு தனது அமைச்சின் கீழான நெடா மற்றும் கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியவற்றினூடாக நன்கொடைகளும் கடன் உதவியும் வழங்கப்படும் எனவும் மோசமாக பாதிக்கப்பட்ட வியாபாரா நிலையங்களுக்கும் நட்டஈடு பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, க.பொ.த உயர் தரப் பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களின் கல்வியில் எந்தப் பாதிப்பும் வராது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்விப் பணிப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய அமைச்சர், அது தொடர்பிலான தேவைகளை சமர்ப்பிக்குமாறும் தெரிவித்தார்.

இதன்பின்னர் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு துறைக்கும் மேற்பார்வை செய்ய தனித்தனியாக அதிகாரிகள் நிமிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .