Editorial / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாண மாநகர முதல்வர், தமது நிறுவனத்தின் கம்பங்களை அகற்றியமை எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தள்ளுபடிசெய்யப்பட்டமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (11) விசாரணைக்கு எடுத்துக் கொண்டது
சீராய்வு மனுவின் பிரதிவாதிகள் முறையே யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சட்ட மா அதிபர், மாநகர முதல்வர் இ.ஆர்னல்ட், மாநகர ஆணையாளர் ஜே.ஜெயசீலன் ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மனுவை வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் கேபிள் கம்பங்கள் நடப்பட்டன என்று தெரிவித்து யாழ்ப்பாண மாநகர சபை முதல்வரால் அவை ஜனவரி மாத முற்பகுதியில் அகற்றப்பட்டன.
இது தொடர்பில் கேபிள் கம்பங்களை நட்டுவைத்த நிறுவனம் யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியது.
அந்த முறைப்பாட்டுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதும் பொலிஸ் நிலையத்தில் முற்படவில்லை என்று தெரிவித்து அவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைக் கோவையின் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் கடந்த மாதம் 17ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்தனர்.
பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மற்றும் ஆணையாளர் இருவரையும் கடந்த 21ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக அழைப்புக்கட்டளை அனுப்ப உத்தரவிட்டார்.
வழக்கு கடந்த 21ஆம் திகதி விசாரணைக்கு வந்தது. யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட், மாநகர ஆணையாளர் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர்.
முறைப்பாட்டாளர்களின் நலன்சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகினர். யாழ்ப்பாணம் மாநகர முதல்வரை விளக்கமறியலில் வைக்கவேண்டும் என்று அவர்கள் வாதாடினர்.
“மாநகர சபை எல்லையில் மாநகர சபையின் அனுமதி பெறப்படாமல் அமைக்கப்பட்ட கம்பங்களை அகற்றுவதற்கு உள்ளூராட்சி சபைகள் சட்டத்தின் கீழ் முதல்வருக்கும் ஆணையாளருக்கும் அதிகாரம் உண்டு.
அவர்களால் அகற்றப்பட்ட கம்பங்கள் தொடர்பில் குற்றவியல் வழக்கின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு ஏற்பாடுகள் இல்லை. எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும்” என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றுரைத்தனர்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் ஏ.எஸ்.பி. போல், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட் மற்றும் ஆணையாளர் இருவரையும் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து கேபிள் சேவை வழங்கும் நிறுவனத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்று (11) திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகி பூர்வாங்க சமர்ப்பணத்தை மன்றில்முன்வைத்தனர்.
பொலிஸார் நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கை தாக்கல் செய்த போது முரண்பாடாக சட்ட ஏற்பாடுகளை மாறி மாறி பயன்படுத்தியுள்ளனர். எனவே சீராய்வு மனுவை ஏற்றுக்கொண்டு எதிர்மனுதாரர்களுக்கு அறிவித்தல் அனுப்ப மன்று கட்டளையிடவேண்டும் என சட்டத்தரணி மன்றுரைத்தார்.
மனுதாரரின் சமர்ப்பணத்தை ஆராய்ந்த மேல் நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டது. மனு மீதான விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
8 minute ago
12 minute ago
27 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
27 minute ago
39 minute ago