Niroshini / 2021 ஜனவரி 05 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் மாவட்ட நுழைவிடங்களில், விரைவில் துரித என்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக, யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் தற்போதுள்ள கொரோனா வைரஸ் நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ். மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை, ஒக்டோபர் மாதத்துக்குப் பின்னர் 168ஆக அதிகரித்துள்ளதாகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், தற்பொழுது சுய தனிமைப்படுத்தலில் உள்ளோரின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஆயிரத்து 41 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 807 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்களெனவும் கூறினார்.
'தற்போதைய சூழ்நிலையில் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும்போது, யாழ். மாவட்டத்தில் தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை சற்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படுகின்றது. இருந்த போதிலும், தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் குறித்த நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் எதிர்பார்க்கின்றோம். எனினும் அதற்கு பொதுமக்களுடைய ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றோம்' எனவும், அவர் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் இரண்டு வாரங்களும் மிகவும் அபாயகரமான காலப்பகுதியாக இருப்பதாகவும், அதனால், சற்று விழிப்பாக இருந்து பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும், மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்..
'தற்பொழுது அரசாங்கத்தினால் திரையரங்குகள் மற்றும் ஏனைய விடயங்களிலும் இயல்பு நிலையை ஏற்படுத்தும் முகமாக சில மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளார்கள். இந்த நிலையிலே கூடுதலாக விழிப்பாக இருக்க வேண்டியதாகவுள்ளது.
'அத்துடன், எதிர்வரும் 11ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. பாடசாலைகள் ஆரம்பிப்பது குறித்து வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஊடாக சிறப்பான ஒழுங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'எனவே, பெற்றோர் மற்றும் பாடசாலையுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் குறித்த விடயங்கள் தொடர்பில் மிகவும் விழிப்பாக செயற்படுவதன் மூலம் குறித்த கட்டுப்பாட்டினை தொடர்ச்சியாக பேணமுடியும்' என்றார்.
மேலும் தனியார் கல்வி நிலையங்களை பொறுத்தவரை இந்த வாரத்தில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்காக காத்திருக்கின்றோம் எனத் தெரிவித்த அவர், எனினும், முடிவு கிடைக்கும் வரை குறித்த நடைமுறை அமுலில் இருக்கும் எனவும் கூறினார்.
'யாழில் சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் அவற்றை மீள திறப்பதற்குரிய மாற்று ஒழுங்கு தொடர்பில் தற்போது நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். அந்த மாற்று ஒழுங்கின் அடிப்படையில் சந்தைகளை மீளதிறப்பதற்கு ஏற்பாடுகளை நாங்கள் மிக விரைவில் செயல்படுத்தவுள்ளோம்' என, மாவட்டச் செயலாளர் கூறினார்.
'அதேவேளை, போக்குவரத்து விடயத்திலும் மிகவும் கவனமாக செயற்படவேண்டியுள்ளது. அதாவது, அபாய வலயங்களுக்கு சென்று வருபவர்கள் தங்களுடைய விவரங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.'மேலும், யாழ். மாவட்டத்தில் துரித அன்ரிஜன் பரிசோதனை செய்வதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அந்த முடிவு விரைவில் வடக்கு சுகாதார பிரிவால் அறிவிக்கப்படவுள்ளது' எனவும், அவர் தெரிவித்தார்.
அதாவது, யாழ். மாவட்டத்துக்குள் நுழையும் வாயில்களில், ஆனையிறவு மற்றும் சங்குப்பிட்டி போன்ற இடங்களில் துரித என்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. எதிர்வரும் நாள்களில் குறித்த என்ரிஜன் பரிசோதனையினை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது'. என்றார்.
5 minute ago
17 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
20 Mar 2026
20 Mar 2026