2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

இலங்கை காப்புறுதி சங்கத்தின் தலைவராக பிரகாஷ் ஷாஃப்ட்டர் தெரிவு

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 25 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை காப்புறுதி சங்கத்தின் தலைவராக, ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான பிரகாஷ் ஷாஃப்ட்டர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற காப்புறுதி சங்கத்தின் வருடாந்த பொது கூட்டத்தில் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பிரகாஷ் ஷாஃப்ட்டர், இலங்கை 'காப்புறுதி துறையின் தந்தை' என வர்ணிக்கப்படும் சி.டி.ஏ. ஷாஃப்ட்டர் அவர்களின் சிரேஷ்ட புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் செயற்பாடுகளை 2006ஆம் ஆண்டு முதல் பொறுப்பேற்று முன்னெடுத்து வருகிறார். இவர் பொறுப்பேற்கும் போது, நிறுவனத்தின் வர்த்தக பெறுமதி 4 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. இன்று இந்த பெறுமதி 8 பில்லியன் ரூபாவை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. காப்புறுதி துறையில் 25 வருட கால முன்அனுபவத்தை கொண்டுள்ள இவர், 1994ஆம் ஆண்டு ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் நிறுவப்பட்டது முதல் நிறுவனத்தில் முக்கிய பங்கை வகித்து வருகிறார். பட்டைய காப்புறுதி கல்வியகத்தின் அங்கத்தவரான இவர், லண்டன் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான கற்கையை பூர்த்தி செய்துள்ளதுடன், பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் MBA பட்டத்தையும் பெற்றுள்ளார். இலங்கை காப்புறுதி சம்மேளனத்தின் முன்னாள் பதில் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார். கலவரம் மற்றும் பயங்கரவாத நிதியம் போன்ற முக்கிய கழகங்களில் இவர் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் வலையமைப்பு மூலம் ஒன்றிணைக்கும் அமைப்பான YPO வின் பங்குபற்றுனராகவும் இவர் திகழ்ந்துள்ளார். இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபையின் முன்னாள் செயலாளராகவும் இவர் செயலாற்றியுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அணியின் சார்பாக இவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகத்தின் முன்னாள் தலைவர் என்பதுடன், பல ஆண்டுகள் செயலாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.

தலைவராக பொறுப்பேற்ற பிரகாஷ் ஷாஃப்ட்டர் கருத்து தெரிவிக்கையில், 'காப்புறுதி துறையானது நன்கு ஒருங்கிணைக்கப்பட்டதும், திடமாக நெறிமுறைப்படுத்தப்பட்டதுமான ஓர் துறையாகும். இந்த துறையை சேர்ந்த நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டியும், கட்டமைப்பான சேவையும் மக்களுக்கு வழங்கப்படுகிறது. சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் உறுதியான சமநிலையை கொண்டதாக இந்த துறை அமைந்துள்ளது. இந்த அனைத்து நிறுவனங்களும் சிறந்த செயற்பாடுகள் மற்றும் ஆபத்துக்களை தவிர்க்கும் வகையிலான கொள்கைகளை வகுத்து தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன. இலங்கை காப்புறுதி சபையுடன் இணைந்து இந்த துறை எதிர்காலத்தில் எழவுள்ள புதிய சவால்களை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதற்காக புதிய விதிமுறைகளையும் சர்வதேச முறைகளுக்கமைய பின்பற்ற தயாராகி வருகிறது. இந்த மாற்றம் மிகவும் சுமூகமானதாக இருக்க வேண்டும் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். எனது முன்னோர்கள் முன்னெடுத்திருந்த சிறப்பான நடவடிக்கைகளை நான் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்' என்றார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், 'எமது பிரதான சவால் என்பது ஆயுள் காப்புறுதி தொடர்பாக பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும். எமது ஆயுள் காப்புறுதி அளவு மொத்த சனத்தொகையின் 11 வீதமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக, மக்கள் மத்தியில் பெருமளவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வழங்கும் நடவடிக்கைகளை பிராந்திய ரீதியில் முன்னெடுக்க வேண்டும். இந்தியாவில் இந்நிலை மிகவும் முன்னேற்றம் கண்டதாக காணப்படுகிறது. மொத்த தேசிய உற்பத்திக்கு நிகரான காப்புறுதி 4 வீதம் ஆக அமைந்துள்ளது. இந்த பெறுமதி அபிவிருத்தியடைந்த சந்தைகளில் மொத்த தேசிய உற்பத்தியில் 6 – 9 வீதமாக அமைந்திருக்கும். இலங்கையில் 2011ஆம் ஆண்டில் ஆயுள் மற்றும் பொது காப்புறுதிகளின் அளவு மொத்த தேசிய உற்பத்தியில்; 1.2 வீதமாக அமைந்திருந்தது. ஆயுள் காப்புறுதி மட்டும் 2011ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 0.54 வீதமாக அமைந்திருந்தது. நான் காப்புறுதி துறையின் மிகவும் முக்கியமான நிலைக்கு நியமிக்கப்பட்டுள்ளேன் என்பதை நன்கு அறிவேன். என் மீது கொண்டுள்ள நம்பிக்கையையிட்டு நான் பெருமையடைவதுடன், காப்புறுதி சம்மேளனம் மற்றும் காப்புறுதி சபை போன்றவற்றின் அர்ப்பணிப்பான குழுவினரின் உறுதி எனது செயற்பாடுகளுக்கு வலுச்சேர்க்கும்' என்றார்.

இலங்கை காப்புறுதி சம்மேளனத்தின் புதிய நிர்வாக அங்கத்தவர்களாக டேர்க் பெரேரா (பதில் தலைவர்), மொஹான் டி அல்விஸ் (செயலாளர்) மற்றும் தீப்தி லொகுஆராச்சி(பொருளாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .